தொகுதி பங்கீடு முடிவு: டில்லியில் ஆம்ஆத்மி 4, காங்., 3 தொகுதிகளிலும் போட்டி?
தொகுதி பங்கீடு முடிவு: டில்லியில் ஆம்ஆத்மி 4, காங்., 3 தொகுதிகளிலும் போட்டி?
UPDATED : பிப் 22, 2024 04:05 PM
ADDED : பிப் 22, 2024 03:20 PM

புதுடில்லி: வரும் லோக்சபா தேர்தலில் டில்லியில் ஆம் ஆத்மி 4 தொகுதிகளிலும், காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளன என டில்லி அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
வரும் ஏப்.,மே மாதங்களில் லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளது. இதில், மத்தியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அதிகாரத்தில் இருக்கும், பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை வீழ்த்த, காங்., - சமாஜ்வாதி - திரிணமுல் காங்., - தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் இணைந்து, இண்டியா என்ற கூட்டணியை அமைத்துள்ளன.
லோக்சபா தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக, இக்கூட்டணி கட்சிகளிடையே அந்தந்த மாநிலங்களில் பேச்சு நடக்கிறது. எனினும், மேற்கு வங்கத்தில் தனித்து போட்டியிடுவதாக, திரிணமுல் காங்., தலைவரும், முதல்வருமான மம்தா அறிவித்தார்.
அவரை தொடர்ந்து, பஞ்சாபில் மட்டும் தனித்து போட்டியிடுவதாக, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி அறிவித்தது. உ.பி.,யில் மொத்தமுள்ள 80 லோக்சபா தொகுதிகளில், 17ல் காங்கிரசும், 63ல் சமாஜ்வாதியும் போட்டியிடுவது என முடிவு செய்து, தொகுதி பங்கீட்டை இறுதி செய்துள்ளன.
தொகுதி பங்கீடு முடிவு
இந்நிலையில், டில்லியில் 7 லோக்சபா தேர்தல் தொகுதிகள் உள்ளன. காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இடையே தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது. காங்கிரஸ் 3 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 4 தொகுதிகளிலும் களமிறங்கும்.
அதேபோல், ஹரியானாவில் காங்கிரஸ் 9 தொகுதிகளிலும், ஆம்ஆத்மி 1 தொகுதியிலும் போட்டியிடும்.
குஜராத்தில் காங்கிரஸ் 24 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 2 தொகுதிகளிலும் போட்டியிடும் என அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பஞ்சாபில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஆகிய இரு கட்சிகளும் தனித்துப் போட்டியிடப் பரஸ்பரம் முடிவெடுத்துக் கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.