UPDATED : ஆக 07, 2025 06:22 AM
ADDED : ஆக 07, 2025 12:33 AM

லக்னோ: உத்தர பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக பெய்யும் மழையால் கங்கை மற்றும் யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கான்பூர், பிரயாக்ராஜ், வாரணாசி உள்ளிட்ட பகுதிகளில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வெள்ளப் பாதிப்பை பார்வையிடச் சென்ற ஆளும் பா.ஜ., கூட்டணி கட்சியான நிஷாத் கட்சித் தலைவரும், மாநில மீன்வளத்துறை அமைச்சருமான சஞ்சய் நிஷாத், வெள்ளத்தில் தவித்த பெண்களிடம், ''கங்கை மாதா உங்கள் வீடு தேடி வந்து பாதங்களை சுத்தம் செய்துள்ளார்.
''இது, உங்களை நேரடியாக சொர்க்கத்திற்கு அழைத்து செல்லும்,'' என்றார்.
இந்த, 'வீடியோ' சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அதில், 'கங்கையின் ஆசிர்வாதத்தை நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள்' என, ஒரு பெண் பதிலளிக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.
அமைச்சருக்கு கண்டனம் தெரிவித்து சமாஜ்வாதி செய்தி தொடர்பாளர் சர்வேந்திர விக்ரம் சிங் கூறுகையில், ''வெள்ளத்தால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும்போது, நிவாரண உதவிகள் வழங்காமல் அமைச்சர் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்.
''மேலும் இது போன்று பேசுவது, மக்களுடன் அமைச்சர் தொடர்பில் இல்லை என்பதை காட்டுகிறது,'' என்றார்.