UPDATED : நவ 27, 2024 11:37 PM
ADDED : நவ 27, 2024 11:32 PM

புதுடில்லி : 'அரசு வேலையில் சேர்வது போன்ற தனிப்பட்ட ஆதாயங்களுக்காக மதம் மாறுவது பெரும் மோசடி; அதை ஏற்க முடியாது' என, சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.
புதுச்சேரியைச் சேர்ந்த செல்வராணி என்பவர், 2015ல் புதுச்சேரி அரசின் உயர்நிலை எழுத்தர் வேலையில் சேர விரும்பினார். பட்டியல் இனத்தவருக்கான இட ஒதுக்கீட்டில் அந்த வேலை சுலபமாக கிடைக்கும் என்று கருதி, எஸ்.சி., ஜாதிச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தார்.
அவருடைய தந்தை ஹிந்து மதத்தில் வள்ளுவன் என்கிற எஸ்.சி., பிரிவைச் சேர்ந்தவர். தாய் கிறிஸ்துவர். தந்தையின் ஜாதி அடிப்படையில், எஸ்.சி., சான்றிதழ் கேட்டிருந்தார். அவரது கோரிக்கையை அரசு ஏற்கவில்லை.
எஸ்.சி., ஜாதி சான்றிதழ் தர அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஐகோர்ட் அதை தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து அவர் சுப்ரீம் கோர்ட் சென்றார். நீதிபதிகள் பங்கஜ் மிட்டல், ஆர்.மகாதேவன் விசாரித்தனர். தீர்ப்பை நீதிபதி மகாதேவன் அறிவித்தார்.
அவர் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரரின் தந்தை, ஹிந்து எஸ்.சி., பிரிவைச் சேர்ந்தவர். ஆனால், பின்னர் கிறிஸ்துவராக மாறியுள்ளார். தாய் கிறிஸ்துவர். மனுதாரர் குழந்தையிலேயே ஞானஸ்நானம் செய்யப்பட்ட கிறிஸ்துவர்.
அரசு வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக, தானும், தன் குடும்பமும் ஹிந்து என்றும், ஹிந்து மதத்தை பின்பற்றுவதாகவும் கூறுகிறார்.
இதை ஏற்க முடியாது. இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அனைத்து ஆதாரங்களின்படியும், மனுதாரர் பிறப்பு, வளர்ப்பு எல்லாமே கிறிஸ்துவ முறைப்படியே நடந்துள்ளது தெளிவாகிறது. அவர் ஹிந்துவாக மாறியதற்கான எந்த ஆவணத்தையும் காட்ட இயலவில்லை.
ஹிந்துவாக மாறியது தொடர்பாக எந்த ஒரு நிகழ்ச்சியையோ, வள்ளுவன் ஜாதியினர் அவரை மீண்டும் ஏற்றதற்கான எந்த ஒரு ஆவணத்தையோ காட்டவில்லை.
இன்றும் அவர் சர்ச்களுக்கு செல்கிறார்; கிறிஸ்துவ நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார் என்பதற்கான ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
ஒரு மதத்தின் கொள்கைகள், கோட்பாடுகள், அதன் ஆன்மிக சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு, எவரும் அந்த மதத்துக்கு மாறலாம். அது அவர் உரிமை. ஆனால், வேலை வாய்ப்பு போன்ற ஆதாயங்களை அடைவதற்காக மதம் மாறுவதை ஏற்க முடியாது.
ஹிந்து மதத்தை பின்பற்றுவதாக சொல்வதால் மட்டும் அவர் ஹிந்துவாகிவிட முடியாது. அவரை மீண்டும் ஏற்றுக் கொண்டதாக அவருடைய ஜாதிப் பிரிவு கூற வேண்டும். பொது அறிவிப்போ, நிகழ்ச்சியோ நடத்த வேண்டும் அல்லது ஆரிய சமாஜத்தின் வாயிலாக பதிவு செய்ய வேண்டும்.
இத்தனை ஆண்டுகளாக கிறிஸ்துவராக இருந்துவிட்டு, தற்போது இடஒதுக்கீடு பலனை அடைவதற்காக ஹிந்துவாக வாழ்வதாக கூறுவது, இட ஒதுக்கீடு வழங்குவதன் நோக்கத்தை முறியடித்து விடும்.
பின்தங்கிய நிலையில் உள்ளவர்களை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்துடனேயே இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
எனவே, அதை பெறுவதற்காக, மதம் மாறியதாகக் கூறுவது, அரசியலமைப்பை மோசடி செய்வதாகவே அமையும். அதனால், இவருடைய மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது செல்லும்.இவ்வாறு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.