ADDED : ஜன 05, 2025 11:02 PM

கடந்த 2020 - 21ல் மக்களை பாடாய் படுத்தியது கொரோனா. இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுதும் தத்தளித்தது. கர்நாடகாவும் இதற்கு விதிவிலக்கு அல்ல. கொரோனாவால் மாதக்கணக்கில் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டதால் நஷ்டம் ஏற்பட்டது. இதை சமாளிக்க ஆள் குறைப்பு செய்தனர். பல ஆயிரக்கணக்கானோர் வேலையை இழந்தனர்.
ஊரடங்கு
கொரோனா பலரின் வாழ்க்கையை புரட்டி போட்டது என்றாலும், பலருக்கு நன்மையாகவும் இருந்தது. குறிப்பாக பல பெண்களை தொழிலதிபர்களாக்கியது. இது ஆச்சரியம் என்றாலும் உண்மை. கொரோனா நேரத்தில், ஊரடங்கு இருந்ததால், கதக், கஜேந்திரகடாவில் பெண்களுக்கு வேலை கிடைக்கவில்லை. வருவாய் இல்லாமல் குடும்பத்தை நடத்த முடியவில்லை. என்ன செய்வது என, தெரியாமல் கையை பிசைந்தனர்.
அப்போது மாவட்ட, கிராம பஞ்சாயத்து அதிகாரிகள், 'சஞ்சீவினி' என்ற திட்டத்தை பற்றி, பெண்களிடம் விவரித்தனர். இந்த திட்டத்தின் கீழ் கடன் உதவி பெற்று, சுய தொழில் துவங்கும்படி ஆலோசனை கூறினர். ஆரம்பத்தில் பெண்கள் தயங்கினர். அதன்பின் தங்களுக்கு தெரிந்த சமையலை வைத்து தொழில் துவங்க முடிவு செய்தனர். கடன் பெற்று மாவு இயந்திரங்கள் வாங்கினர். இதன் மூலம் சப்பாத்தி தயாரித்து, விற்பனை செய்ய துவங்கினர்.
சிறிய அளவில் துவங்கிய தொழில், இன்று பெரிய அளவில் வளர்ந்துள்ளது. முதலில் கோகேரி கிராமத்தில் இத்தொழில் துவங்கப்பட்டது. அங்குள்ள நுாற்றுக்கணக்கான பெண்கள் சோள சப்பாத்தி தயாரித்து விற்றனர். சப்பாத்திகள் தயாரித்து, நகரங்களுக்கு சப்ளை செய்கின்றனர். இதற்கு நல்ல டிமாண்ட் உள்ளது.
நல்ல லாபம்
கதக் மற்றும் அதன் நகரங்களின் ஹோட்டல்கள், தாபாக்கள் உட்பட பல்வேறு இடங்களுக்கு அனுப்புகின்றனர். நல்ல லாபம் கிடைப்பதை அறிந்து, பெரும்பாலான கிராமங்களின் பெண்கள் சப்பாத்தி தொழிலை துவக்கினர். இவர்களுக்கு மகளிர் சுய உதவி குழுக்கள் உதவிக்கு வந்தன. கடன் வழங்கின.
தற்போது பெண்கள் பலரும், சப்பாத்தி தயாரிக்கும் மையங்களை வைத்துள்ளனர். ஆரம்ப நாட்களில் சோள சப்பாத்தி மட்டும் தயாரித்தனர். இதிலும் போட்டி அதிகரித்ததால், கோதுமை, கேழ்வரகு, சிறு தானியங்கள் சப்பாத்தி தயாரித்து விற்கின்றனர். கை நிறைய சம்பாதித்து நிம்மதியாக வாழ்க்கை நடத்துகின்றனர். யாரையும் சார்ந்திராமல் தன்னம்பிக்கையுடன் வாழ, சப்பாத்தி தொழில் கை கொடுத்துள்ளது. இவர்களால் கிராமங்களின் பல பெண்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.
இது தொடர்பாக, கஜேந்திரகடா தாலுகா செயல் நிர்வாக அதிகாரி மோகன் கூறியதாவது:
கிராமங்களில் வசிக்கும் பெண்கள், சுய தொழில் துவங்கி பொருளாதாரத்தில் முன்னேற, சஞ்சீவினி திட்டம் உதவுகிறது. கோகேரி கிராமத்தில் துவங்கப்பட்ட சப்பாத்தி தொழிலை வெற்றிகரமாக நடத்துகின்றனர். மற்றவருக்கு முன்னுதாரணமாக திகழ்கின்றனர். அரசின் திட்டங்களை பெண்கள் நல்ல முறையில் பயன்படுத்தி, வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.
ஒரு காலத்தில் அன்றாடம் கூலி வேலை தேடி அலைந்த பெண்கள், இன்று சுய தொழில் துவங்கி, தொழிலதிபர்களாக மாறியுள்ளனர். மற்றவருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் அளவுக்கு, அவர்கள் முன்னேறியது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு முன் மாதந்தோறும் 9,000 ரூபாய் சம்பாதித்தனர். இன்று தினமும் 6,000 ரூபாய் முதல் 8,000 ரூபாய் வரை சம்பாதிக்கின்றனர். பெண்களுக்கு உதவ முன் வந்த கனரா வங்கிக்கும், நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்
- நமது நிருபர் -.

