தனியார் பஸ்களுக்கு 'சக்தி' திட்டம் மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட்
தனியார் பஸ்களுக்கு 'சக்தி' திட்டம் மனுவை தள்ளுபடி செய்த ஐகோர்ட்
ADDED : ஜன 07, 2024 02:43 AM
பெங்களூரு : அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயண வசதியை வழங்கும் 'சக்தி' திட்டத்தை, தனியார் பஸ்களுக்கும் நீட்டிக்க கோரிய மனுவை, கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன், இம்மனு தொடர்பாக, இரண்டு மாதங்களுக்குள் பரிசீலிக்குமாறு, அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது.
கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு, பெண்கள் அரசு பஸ்களில் இலவசமாக செல்லும் 'சக்தி' திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதற்கு பெண்களிடம் அமோக வரவேற்பு கிடைத்தது.
அதேவேளையில், தனியார் பஸ்களில் பயணம் செய்து வந்த பெண்களும் கூட, அரசு பஸ்களில் செல்ல துவங்கினர். இதனால் தனியார் பஸ் உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில், உடுப்பி மாவட்டத்தின் கார்காலாவைச் சேர்ந்த சரத்குமார் ஷெட்டி என்ற தனியார் பஸ் உரிமையாளர், கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இம்மனு நீதிபதி கிருஷ்ணகுமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் பேசியதாவது:
கர்நாடகத்தில் 65 ஆண்டுகளாக தனியார் பஸ்கள் இயங்கிய வரலாறு உள்ளது. 16 மாவட்டங்களில் 9,000க்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவற்றை நம்பி, 75,000 தொழிலாளர்கள் உள்ளனர்.
மேலும், ஆண்டுக்கு 1,620 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் பஸ் உரிமையாளர்கள், அதற்கான வரியும் கட்டி வருகின்றனர்.
ஆனால், சக்தி திட்டம் அமலுக்கு வந்த நாளில் இருந்து, தனியார் பஸ் உரிமையாளர்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். எனவே, இத்திட்டத்தை தனியார் பஸ்களுக்கும் பயன்படுத்த வேண்டும். அரசு பஸ்களை போன்று தனியார் பஸ்களிலும் பயணம் செய்யும் பெண்களின் பயண செலவை, தனியார் பஸ் உரிமையாளர்களுக்கு அரசு திருப்பித்தர வேண்டும்.
இம்மனு தொடர்பாக அரசுக்கும், போக்குவரத்துத் துறைக்கும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
இதையடுத்து, 'அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயண வசதியை வழங்கும் 'சக்தி' திட்டத்தை, தனியார் பஸ்களுக்கு நீட்டிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்ததுடன், இம்மனு தொடர்பாக, இரண்டு மாதங்களுக்குள் பரிசீலிக்குமாறு, அரசுக்கு நீதிபதி சரத்குமார் ஷெட்டி உத்தவிட்டார்.