அதிகரித்து வரும் மாணவர் தற்கொலை: வழிகாட்டுதல் வெளியிட்டது கோர்ட்
அதிகரித்து வரும் மாணவர் தற்கொலை: வழிகாட்டுதல் வெளியிட்டது கோர்ட்
ADDED : ஜூலை 27, 2025 01:39 AM

புதுடில்லி: நாட்டில் அதிகரித்து வரும் மாணவர் தற் கொலைகள் மற்றும் அவர்களின் மனநலன் சார்ந்த பாதிப்புகளை தடுக்க, உச்ச நீதிமன்றம் 15 வழிகாட்டுதல்களை பிறப்பித்துள்ளது.
ஆந்திராவில், 'நீட்' தேர்வுக்குத் தயாராகி வந்த, 17 வயது மாணவர், விடுதியில் இறந்து கிடந்தார்.
இது தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை கோரி, மாணவனின் தந்தை தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா அமர்வு, கல்வி மன அழுத்தம், தேர்வு அழுத்தத்திற்கு இடையே ஆசிரியர், பெற்றோரின் ஆறுதல் இல்லாததால், மாணவர்கள் தற்கொலை அதிகரித்து வருவதாகக் கூறியது.
கடந்த 2022ல், நாடு முழுதும் 1.70 லட்சம் பேர் தற்கொலை செய்து இறந்தனர். இதில், 13,044 பேர் மாணவர்கள் என, என்.சி.ஆர்.பி., எனப்படும், தேசிய குற்றப் பதிவுப் பணியகத்தின் தரவுகளை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
ஒவ்வொரு 100 தற் கொலைகளில், எட்டு பேர் மாணவர்களாக இருப்பதை குறிப்பிட்டு வருத்தம் தெரிவித்த நீதிபதிகள், மாணவர் தற்கொலைகளை தடுக்க, 15 வழிகாட்டுதல்களையும் பிறப்பித்துள்ளனர்.
அதன் விபரம்:
பள்ளிகள், கல்லுாரிகள், பயிற்சி மையங்கள், பல்கலைக்கழகங்கள், அகாடமிகள், விடுதிகளில் கட்டாய மனநல ஆலோசனை மையங்கள் அமைக்கப்படவேண்டும்
கல்வி நிலையங்களில் மனநல ஆலோசகர் அல்லது உளவியலாளரை வைத்து, மாணவர்களுக்கு மனநல பாதுகாப்பு குறித்து ஆலோசனைகள் வழங்க வேண்டும்
குறிப்பாக தேர்வு காலங்களிலோ, உயர் கல்விக்கு மாறும்போதோ வழிகாட்டிகளை நியமித்து, மாணவர்கள் அச்சத்தைப் போக்க வேண்டும்
ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களும், ஆண்டுக்கு இரண்டு முறையாவது கட்டாய மனநலப் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்
கல்வி மற்றும் ஜாதி அடிப்படையில் மாணவர்களை பாகுபாடாக நடத்தக்கூடாது
பாலியல் துன்புறுத்தல், ராகிங் உள்ளிட்ட பிரச்னை குறித்து மாணவர்கள் புகார் தெரிவித்தால், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்
மின் விசிறியை பயன்படுத்தி தற்கொலை செய்யாத வகையிலும், மொட்டை மாடி, பால்கனி போன்றவற்றில் தடுப்புகள் இருக்கும் வகையிலும் விடுதிகள், பயிற்சி நிறுவனங்கள் இருக்க வேண்டும்
விடுதிகள், வகுப்பறைகள், பொ துவான இடங்கள் மற்றும் வலைதளங்களில் தற்கொலை உதவி எண்கள், பிற தேசிய சேவை எண்களை பெரிய அளவில் தெளிவாக அச்சிட வேண்டும்
மாணவர்களுக்கு மனநலம், கல்வியறிவு, உணர்வுகளை கட்டுப்படுத்துதல் மற்றும் திறன் மேம்பாடு உள்ளிட்டவற்றை மேம்படுத்த, பெற்றோருக்கும் கல்வி நிறுவனங்கள் பயிற்சி அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 32வது பிரிவின் கீழ் உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, உச்ச நீதி மன்றம் இந்த உத்தரவுகளை பிறப்பித்தது.
பார்லிமென்ட் அல்லது மாநில சட்டசபைகளில் உரிய சட்டம் இயற்றப்படும் வரை இந்த உத்தரவு, சட்டமாக அமலில் இருக்கும் என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.