'மாஜி' அமைச்சர் மேனகாவுக்கு கோர்ட் கண்டனம்; தெருநாய் வழக்கில் உத்தரவுகளை விமர்சித்ததால் சிக்கல்
'மாஜி' அமைச்சர் மேனகாவுக்கு கோர்ட் கண்டனம்; தெருநாய் வழக்கில் உத்தரவுகளை விமர்சித்ததால் சிக்கல்
ADDED : ஜன 21, 2026 01:06 AM

புதுடில்லி: 'தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு நடைமுறை சாத்தியமற்றது' என, சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த பா.ஜ.,வைச் சேர்ந்த விலங்கின ஆர்வலரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மேனகாவுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தலைநகர் டில்லியில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வந்த நிலையில், அது தொடர்பாக தாமாக முன்வந்து உச்ச நீதிமன்றம் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. கடந்த வாரம் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, 'நாய்க்கடி மரணங்களுக்கு நாய் பிரியர்கள், அதற்கு உணவு அளிப்பவர்களையும் பொறுப்பாக்கி, அபராதம் வசூலிக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் கண்டிப்புடன் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்.வி. அஞ்சாரியா அமர்வு முன் இவ்வழக்கு 5வது நாளாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
பதிலடி
அப்போது ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், கடந்த விசாரணையின் போது நீதிபதிகள் வாய்மொழியாக தெரிவித்த சில கருத்துகள் குறித்து பேசினார், ''கடந்த விசாரணையின் போது, நீதிபதிகள் தெரிவித்த கருத்துகள் தவறாக புரிந்து கொள்ளப் பட்டன,'' என்றார்.
இதற்கு பதில் அளித்த நீதிபதி சந்தீப் மேத்தா, ''நாய் பிரியர்கள் சார்பில் யதார்த்தம் இல்லாத வகையில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலடியாகவே அந்த கருத்துகள் கூறப் பட்டன,'' என்றார்.
மீண்டும் வாதிட்ட பிரசாந்த் பூஷண், ''நீதிமன்றம் தெரிவிக்கும் சில கருத்துகள் சில நேரங்களில் பின்விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன. ''நாய்க்கடி மரணங்களுக்கு நாய் பிரியர்களையும் பொறுப்பாளியாக்க வேண்டும் என வாய்மொழியாக கிண்டலாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவும், அப்படி தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டது,'' என்றார்.
இம்முறை குறுக்கிட்ட நீதிபதி சந்தீப் மேத்தா, ''அது கிண்டலாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவு அல்ல. நாங்கள் தீவிரமாகவே அந்த உத்தரவை பிறப்பித்தோம். நாய்க்கடி பிரச்னைக்கு என்ன செய்வது என எங்களுக்கும் தெரியவில்லை. ஆனால், இந்த பிரச்னைக்கு தீர்வு காண மும்முரமாக இருக்கிறோம்,'' என்றார்.
இந்த கட்டத்தில் நீதிமன்றத்தில் இருந்த மூத்த வழக்கறிஞரான ராஜூ ராமச்சந்திரன், திடீரென பா.ஜ.,வை சேர்ந்த விலங்கின ஆர்வலரும் முன்னாள் மத்திய அமைச்சருமான மேனகாவுக்காக ஆஜராக முன் வந்தார்.
''பார் கவுன்சில் உறுப்பினர் என்ற முறையில் நானும் சில கருத்துகளை தெரிவிக்க விரும்புகிறேன். நீதிமன்ற விவகாரங்கள் காட்சி ஊடகங்களில் ஒளிபரப்பாகின்றன. எனவே, கவனத்துடன் செயல்பட வேண்டிய கடமை நீதிமன்றத்திற்கும் இருக்கிறது,'' என்றார்.
அதற்கு நீதிபதி மேத்தாவோ, ''அதில் நாங்கள் கவனமாகவே இருக்கிறோம். நிச்சயம் கவனத்தை சிதறவிட மாட்டோம்,'' என கூறினார்.
சிறிது நேரத்திற்குப் பின், மூத்த வழக்கறிஞர் ராமச்சந்திரன் முன்வைத்த வாதத்திற்கு நீதிபதி விக்ரம் நாத் பதில் அளித்தார்.
''இதே நீதிமன்றத்தில் சிறிது நேரத்திற்கு முன் ஒரு கருத்தை நீங்கள் முன் வைத்தீர்கள். நீதிமன்றம் கவனமாக இருக்க வேண்டும் என கூறியிருந்தீர்கள். ''அதே சமயம், உங்கள் மனுதாரர் ஒரு பேட்டியின் போது, நீதிமன்ற உத்தரவு தொடர்பாக என்ன கருத்தை முன்வைத்தார் என்பது உங்களுக்கு தெரியுமா? நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் பேசி இருக்கிறார். ஆனால், திடீரென அவருக்காக நீங்கள் வாதம் செய்கிறீர்கள்,'' என்றார்.
அப்போது வழக்கறிஞர் ராமச்சந்திரன், ''மும்பை தாக்குதல் பயங்கரவாதி அஜ்மல் கசாபுக்காக வாதாட இந்த நீதிமன்றம் எனக்கு அனுமதி தரும்போது, மேனகாவுக்காகவும் வாதாட முடியும்,'' என பதில் வாதம் வைத்தார்.
பெருந்தன்மை
''ஆனால், அஜ்மல் கசாப் நீதிமன்ற அவமதிப்பு செய்யவில்லை. உங்கள் மனுதாரர் நீதிமன்ற அவமதிப்பு செய்து இருக்கிறார். ஆனால், நாங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. அது தான் எங்களது பெருந்தன்மை. ''பேட்டியில் அவர் என்ன கூறி இருக்கிறார் என்பதை பாருங்கள். முக்கியமாக அவர் வெளிப் படுத்திய உடல் மொழியை கவனியுங்கள்.
''உங்கள் மனுதாரர் மத்திய அமைச்சராக இருந்த போது விலங்குகள் நலனுக்காக எந்த வகையில் பங்காற்றினார். அதற்காக எவ்வளவு நிதி ஒதுக்கினார்,'' என நீதிபதி விக்ரம் நாத் சரமாரியாக கேள்விகள் எழுப்பி கண்டனம் தெரிவித்தார்.
இதற்கு வாய்மொழியாக தம்மால் பதில் அளிக்க முடியாது என வழக்கறிஞர் ராமச்சந்திரன் கூறியதை அடுத்து, அத்துடன் அவருடனான வாதத்தை நீதிபதிகள் முடித்துக் கொண்டனர். பின்னர், நாய் பிரியர்கள் சார்பில் ஆஜரான பிற வழக்கறிஞர்களின் வாதத்தை கேட்ட பின், வழக்கை வரும் 28ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

