ADDED : ஜூலை 25, 2025 12:57 AM
புதுடில்லி: மும்பை சங்கிலி தொடர் குண்டுவெடிப்பில், 12 குற்றவாளிகளையும் விடுவித்த உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதேசமயம், குற்றவாளிகளை மீண்டும் கைது செய்யக் கூடாது என்றும் உத்தர விட்டுள்ளது.
மஹாராஷ்டிராவின் மும்பையில் கடந்த 2011ல் புறநகர் ரயில்களில் அடுத்தடுத்து ஏழு வெடிகுண்டுகள் வெடித்த சம்பவத்தில், 180க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்; 800க்கும் மேற்பட்ட அப்பாவிகள் படுகாயமடைந்தனர்.
நாட்டையே உலுக்கிய இந்த குண்டுவெடிப்பு வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் குற்றஞ்சாட்டப்பட்ட 12 பேரையும் குற்றவாளிகள் என அறிவித்தது. அவர்களில் ஐந்து பேருக்கு மரண தண்டனையும், ஏழு பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்தது.
தொடர்ந்து இவ்வழக்கின் மேல்முறையீட்டு மனுவை மும்பை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் அனில் கிலோர், ஷ்யாம் சண்டக் அடங்கிய அமர்வு விசாரித்தது. குற்றவாளிகள் 12 பேர் மீதான குற்றங்களை அரசு தரப்பு நிரூபிக்க தவறிவிட்டதாக கூறி, அவர்கள் அனைவரையும் வழக்கில் இருந்து விடுவிப்பதாக தீர்ப்பளித்தது.
மும்பை உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, அரசு தரப்பு மற்றும் வழக்கை விசாரித்து வந்த பயங்கரவாத தடுப்புப் பிரிவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதையடுத்து மாநில அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் கோட்டீஸ்வர் சிங் அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ''இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விவகாரம். எனவே அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும்,'' என கேட்டுக் கொண்டார்.
மேலும், ''மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கும் தடை விதிக்க வேண்டும்,'' என வலியுறுத்தினார்.
அவரது வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைப்பதாக கூறி உத்தரவிட்டனர். அதன் விபரம்:
மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை முன்னுதாரணமாக கருத முடியாது. எனவே, வழக்கில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளுக்கும் நோட்டீஸ் பிறப்பிக்க உத்தரவிடுகிறோம். அவர்களிடம் விசாரணை நடத்திய பின் முடிவு எடுக்கப்படும்.
மும்பை உயர் நீதிமன்றம் ஏற்கனவே அவர்களை விடுதலை செய்துவிட்டதால், மீண்டும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்ற கேள்வி தற்போது எழவில்லை.
அதே சமயம் இவ்வழக்கில் நீதி மறுக்கப்பட்டதையும் புறந்தள்ள முடியாது. எனவே மற்ற வழக்குகளுக்கு, இந்த தீர்ப்பை முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் நீதி மறுக்கப்பட்டதால், மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.