'கோவாக்சின்' பாதுகாப்பானது: தயாரிப்பு நிறுவனம் விளக்கம்
'கோவாக்சின்' பாதுகாப்பானது: தயாரிப்பு நிறுவனம் விளக்கம்
ADDED : மே 02, 2024 05:52 PM

புதுடில்லி: 'கோவாக்சின்' கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது என அதனை தயாரித்த பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
கொரோனா பரவலின்போது, ஆஸ்ட்ரா ஜெனேகா நிறுவனம் கோவிஷீல்டு என்ற தடுப்பூசி மருந்தை தயாரித்தது. 'சீரம் இந்தியா' நிறுவனம் அந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து, அதே பெயரில் தடுப்பூசி தயாரித்தது. குறைந்தபட்சம் ஒருவருக்கு இரண்டு டோஸ் வீதம், நம் நாட்டில் மட்டும் 175 கோடி டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டது. வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டது.
ஒப்புதல்
கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக் கொண்டதால், பக்க விளைவுகள் ஏற்பட்டு பாதிக்கப்பட்டதாகவும், பலர் மரணம் அடைந்ததாகவும் பிரிட்டிஷ் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன.
வழக்கு விசாரணையின்போது, ' தாங்கள் தயாரித்த தடுப்பூசி மருந்தால் ரத்தத்தை உறைய வைக்கும் ஒரு நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. டி.டி.எஸ்., எனப்படும் 'த்ரோம்போசிஸ் மற்றும் த்ரோம்போசைடோபினியா சிண்ட்ரோம்' என்ற அந்த நோய் தாக்கினால், மூளை அல்லது உடலின் ஏதாவது ஒரு பகுதியில் ரத்தம் உறைந்து கட்டியாகிவிடும். ரத்த அணுக்களின் எண்ணிக்கையும் குறையலாம்' என ஒப்புக்கொண்டது.
இதனையடுத்து கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனினும், தடுப்பூசி போட்டுக் கொண்ட சில மாதங்களுக்குள் பக்க விளைவுகள் ஏற்படலாமே தவிர, ஆண்டுகள் கடந்த பின் உண்டாகும் நோய்களை தடுப்பூசியுடன் தொடர்புபடுத்த முடியாது என சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதனையடுத்து, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 'கோவாக்சின்' தடுப்பூசி பற்றியும் பலரும் சந்தேகம் கிளப்பினர்.
விளக்கம்
இந்த நிலையில் கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது என அதனை தயாரித்த பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. 'கோவாக்சின் தடுப்பூசியால் எவ்வித பக்கவிளைவும் ஏற்படாது. கோவாக்சின், மத்திய சுகாதார அமைச்சகத்தால் மதிப்பீடு செய்யப்பட்ட பின்னரே செயல்பாட்டுக்கு வந்தது. மாரடைப்பு, ரத்தம் உறைதல் போன்ற பிரச்னைகள் கோவாக்சின் தடுப்பூசியால் ஏற்படாது' எனவும் பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

