ADDED : ஏப் 01, 2026 12:28 AM
தங்க சங்கிலியை பறிக்க முயன்ற இருவரை தேடும் போலீசார்
புதுடில்லி: தெற்கு டில்லி மாவட்டத்தில், பெண்ணிடம் இருந்து தங்கச்சங்கிலியை பறிக்க முயன்ற இருவர் தப்பினர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தின் போது, அந்த பெண்ணிடம் இருந்து சங்கிலியை பறிக்க முயன்ற நபர் கத்தியால் குத்தியதில் அந்த பெண் படுகாயம் அடைந்தார்.
தெற்கு டில்லி மாவட்டத்தின் சி.ஆர்.பார்க் பகுதியில் கடந்த ஞாயிறு அன்று மாலையில் பெண் ஒருவர், அங்கே உள்ள பாங்கியா சமாஜ் என்ற சங்கம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அவர் பின்னால் வந்த நபர், திடீரென அந்த பெண் அணிந்திருந்த தங்கச்சங்கிலியை பறிக்க முயன்றார்.
அதை அந்த பெண் துணிகரமாக தடுக்க முயன் றார். அதை எதிர்பாராத அந்த நபர், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, அந்த பெண்ணை பலமாக நெற்றி, உடலில் பல இடங்களில் குத்தினார். பட்டப் பகலில் இந்த சம்பவம் நடந்தது. அப்போது, அந்த இடத்தில் நிறைய பேர் நின்றிருந்தனர்.
ஒருவரும் அந்த கொள்ளையனை பிடிக்க முன்வரவில்லை. நீண்ட நேரமாக அந்த பெண் போராடி, தன் சங்கிலியை மீட்டார். ஒரு கட்டத்தில் அந்த கொள்ளையன் அருகே இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தவன் உடன் தப்பினார்.
இதன் பின், அந்த பெண்ணை அங்கிருந்தவர்கள், மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, முதலுதவி சிகிச்சை மற்றும் முகத்தில் தையல் போடப்பட்டதும், அந்த பெண் அங்கிருந்து, நேராக போலீஸ் ஸ்டேஷன் சென்று, புகாரளித்தார். அந்த பெண்ணின் கணவர், தொழிலதிபராக உள்ளார். அவரும், அவர்களது, 11 வயது மகளும், அந்த சங்கம் உள்ளே சென்று விட்டனர். பின்னால் நடந்து வந்த அந்த பெண் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்ற நபருடன் போராடி வெற்றி பெற்றார்.
போலீசார் நடத்திய வாகன சோதனையில், அந்த நபர்கள் தப்பிய ஸ்கூட்டர் பிடிபட்டது. அந்த நபர்களை பிடிக்க, வலை விரித்துள்ளனர்.
உணவு டெலிவரி ஏஜன்ட் கத்தியால் குத்திக்கொலை
புதுடில்லி: தென் மேற்கு டில்லியின் துவாரகா பகுதியில், மூன்று பேரை கத்தியால் குத்த முயன்ற இருவரை தடுத்த, 32 வயது உணவு டெலிவரி ஏஜன்ட், கத்தியால் குத்தப்பட்டதில் இறந்தார்.
கடந்த ஞாயிறு இரவில், பணி முடித்து, வீடு திரும்பிக் கொண்டிருந்தார் மோகன் கார்டன் பகுதியை சேர்ந்த கோவிந்த் ஜா, 32. அவரின் வீடு அருகே அடையாளம் தெரியாத இருவர், பர்வேஸ், அனிஷ் மற்றும் ரோஹித் ஆகியோருடன் மோதலில் ஈடுபட்டனர்.
அவர்களிடையே நடந்த சண்டையை விலக்க சென்ற கோவிந்த் ஜா உள்ளிட்ட மூன்று பேரையும், அந்த இருவர் கத்தியால் குத்தினர். இதில் படுகாயம் அடைந்தார் கோவிந்த் ஜா.
அவரை அங்கேயே விட்டு, மர்ம கும்பலை சேர்ந்த இருவர் தப்பியோடினர். அங்கிருந்தவர்கள், கோவிந்த் ஜாவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, 15 நிமிடங்கள் வரை எவ்வித சிகிச்சையும் இன்றி அமர வைக்கப்பட்ட கோவிந்த் ஜா, அந்த மருத்துவமனையிலேயே இறந்தார்.
அங்கிருந்தவர்கள் கோவிந்த் ஜாவின் சகோதரர் தீரஜ் ஜாவுக்கு போனில் தகவல் கொடுத்தனர். அவர் வருவதற்குள், கோவிந்த் ஜா பிணமாகி விட்டார். கடந்த ஏழு ஆண்டுகளாக உணவு டெலிவரி செய்யும் பணியில் ஈடுபட்டு வந்த கோவிந்த் ஜாவின் மரணம், அவரின் மனைவி மற்றும் இரு குழந்தைகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
சட்ட விரோதமாக 150 குடிசைகளை அமைக்க அனுமதி அளித்த நபர் கைது
குருகிராம்: டில்லி அருகே உள்ள குருகிராமில், செக்டார் 53ல், அரசு நிலத்தில் 150 குடிசைகள் கட்ட அனுமதி அளித்த ஒருவர், அந்த குடிசைவாசிகளிடம் இருந்து வாடகை வசூலித்த போது கைது செய்யப்பட்டார்.
செக்டார் 53ல், நரேஷ் யாதவ், 35, என்பவர் துாண்டுதலால், சட்ட விரோதமாக, 150க்கும் மேற்பட்டோர், குடிசைகளை கட்டி வசிக்க துவங்கினர். ஜட்ஜ் என்கிளேவ் பின்புறம் அமைந்துள்ள அரசு இடத்தில், குடிசைகளை கட்டி வசித்தவர்களிடம், நரேஷ் யாதவ், வாடகை பணம் வசூலிக்கத் துவங்கினார்.
இதை அறிந்த போலீசார், நேற்று மேற் கொண்ட அதிரடி நடவடிக்கையில் அரசு நிலத்தில் குடிசைகளை கட்டி வாழ்ந்தவர்களை விரட்டி அடித்தனர். அவர்கள் அளித்த புகாரில், நரேஷ் யாதவ் என்ற அந்த நபர், அப்பாவி மக்களை ஏமாற்றி, 3,000 ரூபாய் வரை வாடகை வசூலித்து வந்துள்ளார். அவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.
இரண்டு முக்கிய குற்றவாளிகள் போலீசாரால் சுட்டுப்பிடிப்பு
புதுடில்லி: டில்லியில் அதிகரித்துள்ள குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை தேடி, போலீசார் நேற்று முன்தினம் இரவில் பல இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, இரண்டு இடங்களில் துப்பாக்கியால் சுட்டு, ரவுடிகளை பிடித்தனர்.
முக்கிய ரவுடிகள் ரோஹித்குமார் மற்றும் பிரேம் சர்மா ஆகிய இருவரும், துவாரகா பகுதியில் நடந்த கொலை தொடர்பாக, போலீசார் தேடி வந்தனர். அந்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் மீது இருவரும் துப்பாக்கியால் சுட்டனர்.
இதில், போலீஸ் ஏட்டு ஒருவர் அணிந்திருந்த புல்லட் புரூப் எனும் துப்பாக்கி தோட்டாக்கள் துளைக்க முடியாத ஆடையில் பட்டு தெறித்தது. அதையடுத்து, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், காலில் காயமடைந்த ரோஹித்குமார் மற்றும் பிரேம் சர்மா ஆகியோர் விழுந்தனர். அவர்களை போலீசார் கைது செய்து, மருத்துவமனையில் அனுமதித்து, சிகிச்சை அளிக்கின்றனர்.
மற்றொரு சம்பவத்தில், பிரேம் சர்மா என்பவரை, நஜப்கார் என்ற இடத்தில், மூன்று ரவுண்டு துப்பாக்கியால் சுட்டு போலீசார் பிடித்தனர்.
போலீசாரின் வாகன சோதனையில் சிக்கிய இரண்டு திருட்டு வாகனங்கள்
புதுடில்லி:டில்லியில் போலீசார் நேற்று நடத்திய வாகன சோதனையில் திருடப்பட்ட இரண்டு வாகனங்கள் கண்டறியப்பட்டன.
மத்திய டில்லி மாவட்டத் தின் கரோல் பாக் பகுதியில் உள்ள சாதிப்பூர் சவுக் அருகே வேகமாக வந்த இரு சக்கர வாகனம் ஒன்றை போலீசார் தடுத்து நிறுத்தினர் .
அந்த வாகனத்தை ஓட்டி வந்த இருவர், போலீசில் கூறும் போது, முன்னுக்கு பின் முரணாக பல விஷயங்களை கூறியதால், போலீசார் அந்த வாகனம் குறித்து விசாரிக்க துவங்கினர்.
அப்போது தான், கிரேட்டர் நொய்டாவில், 2022ல் அந்த இரு சக்கர வாகனம் திருடப்பட்டதை அறிந்து, அதை திருடிய இருவரை கைது செய்துள்ளனர்.
அதுபோல, நியூரோடக் சாலை போலீசார், சாலையை மறித்தபடி நிறுத்தப்பட்டிருந்த சொகுசு வாகனம் ஒன்றை கண்டறிந்தனர். அந்த சொகுசு வாகனம், டி.ஜி.பி., ரோடு போலீஸ் நிலைய எல்லையில் திருடப்பட்டது என்பதை அறிந்து, அந்த வாகனத்தை திருடியவர்களை தேடி வருகின்றனர்.
