வாலிபரை கொன்ற நண்பர் கைது
ஹூப்பள்ளி எம்.டி.எஸ்., காலனியில் உள்ள காங்கிரஸ் அலுவலகம் முன்பு, கடந்த 31 ம் தேதி உடல் கருகிய நிலையில், வித்யாநகரின் விஜய பசவா, 24 என்பவர் இறந்து கிடந்தார். அவரை பெட்ரோல் ஊற்றி, மர்மநபர்கள் கொன்றது தெரிந்தது.
இந்த கொலையில், விஜய பசவாவின் நண்பர் சையது, 28 நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். சையதுவிடம் மனைவியிடம், விஜய பசவா அடிக்கடி, மொபைல் போனில் பேசி உள்ளார். இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறில், கொலை நடந்தது விசாரணையில் தெரிந்தது.
கஞ்சா கடத்திய மூவர் கைது
ஆந்திராவின் குண்டூர் போலீசார், இரண்டு கார்களில் பெங்களூருக்கு கஞ்சா கடத்திய 3 பேரை, நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். விசாரணையில் அவர்கள், பெங்களூரு ரூரல் ஆனேக்கல் கிஷோர் பிரகாஷ், 34, சுத்தகுண்டேபாளையா அபினவ், 30, பாலாஜிநகர் சுமந்த்குமார், 24 என்பது தெரிந்தது. இவர்களிடம் இருந்து 60 கிலோ கஞ்சா, ஏழு மொபைல் போன்கள், இரண்டு கார்கள், 2.28 லட்சம் ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
கல்லை போட்டு கொலை
ஹாசன் ரூரல் பஸ்டேனஹள்ளி ரயில் தண்டவாளத்தின் அருகில், உடல் அழுகிய நிலையில் ஆண் இறந்து கிடந்தார். அங்கு சென்று போலீசார் உடலை பார்வையிட்டனர். இரண்டு நாட்களுக்கு முன்பே அவர் கொலையானது தெரிந்தது. அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. அவர் கையில் பச்சை குத்தி இருந்த பெயரை வைத்து, யார் என்று அடையாளம் காணும் பணியில், போலீசார் ஈடுபட்டு உள்ளனர்.
தேர்தல் அதிகாரி தற்கொலை
ராம்நகர் கனகபுரா தாலுகா அலுவலகத்தில் தேர்தல் அதிகாரியாக பணியாற்றியவர் சுரேஷ், 50. நேற்று முன்தினம் இரவு, வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், சுரேஷ் தற்கொலைக்கு, பெண் அதிகாரி பூர்ணிமா காரணம் என்று, குடும்பத்தினர் புகார் செய்தனர். இதன்படி, பூர்ணிமாவை கைது செய்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
விபத்தில் 13 பேர் படுகாயம்
சித்ரதுர்கா செல்லகெரே ஹீரேஹள்ளி பகுதியில் நேற்று காலை, கரும்பு பாரம் ஏற்றி சென்ற, டிராக்டரின் பின்பக்கம், கர்நாடகா அரசு பஸ் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் பஸ்சில் இருந்த 13 பேர், படுகாயம் அடைந்தனர். இதில் 3 பேர் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
விஷ செடிக்கு 42 ஆடு பலி
துமகூரு பாவகடா வத்ரேவு கிராமத்தின் கோபால், ஆஞ்சநேயா, ரங்கம்மா ஆகியோர், தங்களுக்கு சொந்தமான 42 செம்மறி ஆடுகளை, நேற்று காலை மேய்ச்சலுக்கு விட்டனர். விவசாய நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்த 42 செம்மறி ஆடுகளும், வாயில் நுரை தள்ளி இறந்தன. கால்நடை அதிகாரிகள் வந்து பரிசோதனை செய்த போது, விஷ செடிகளை தின்றதால், ஆடுகள் பலியானது தெரிந்தது.

