ரூ.7.20 லட்சம் புகையிலை பறிமுதல்
பீதர் பசவகல்யாண் பங்களா கிராசில், நேற்று முன்தினம் இரவு போலீசார் நடத்திய சோதனையில், தெலுங்கானாவில் இருந்து மும்பைக்கு, சரக்கு ஆட்டோவில் கடத்தப்பட்ட 7.20 லட்சம் ரூபாய் மதிப்பிலான, புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
வாலிபரை கத்தியால் குத்திய நண்பர்
பெங்களூரு மாகடி ரோட்டில் வசிப்பவர்கள் விவேக் ராவ், 25, சுதீப், 25. இவர்கள் இருவரும் நண்பர்கள். சுதீப் ஆட்டோ ஓட்டுகிறார். நேற்று முன்தினம் இரவு, சுதீப்பின் ஆட்டோவில் அவரது காதலி, காதலியின் தோழி, விவேக் ராவ் சென்றனர். அப்போது சுதீப் காதலிக்கும், விவேக் ராவுக்கும் இடையே திடீரென பிரச்னை ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த சுதீப், விவேக்கை கத்தியால் குத்தினார். உயிருக்கு போராடியவரை 3 பேரும் சேர்ந்து, மருத்துவமனையில் அனுமதித்தனர். விசாரணை நடக்கிறது.
வாலிபரை தாக்கிய 5 பேர் கைது
சிக்கமகளூரு கொப்பா அருகே சோமலாபுராவில் வசிப்பவர் சதீஷ், 25. இவர், பெங்களூரில் மாருதி என்பவரின் ஹோட்டலில் வேலை செய்தார். சம்பள பிரச்னையில் வேலையை விட்டார். கடந்த 1ம் தேதி சதீஷை வீட்டில் இருந்து, மாருதியின் சகோதரர் மகேஷ், அவரது நண்பர்கள் விட்டல், சிரில், சுனில், மஞ்சு ஆகியோர் கடத்தி சென்றனர். மரத்தில் கட்டி வைத்து அவரை தாக்கினர். படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சதீஷ் சிகிச்சை பெற்று வருகிறார். தாக்குதல் குறித்து சதீஷின் பெற்றோர் அளித்த புகாரில், மகேஷ் உட்பட ஐந்து பேரும் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.
பீஹார் வாலிபர் அடித்து கொலை
ராம்நகர் கனகபுரா சாத்தனுார் சதுக்கத்தில், நேற்று முன்தினம் இரவு ஒரு வாலிபர் ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்தார். அவரது சட்டை பையில் இருந்த ஆதார் அட்டையை வைத்து, பீஹாரின் சஞ்சித்குமார் தாகூர், 31, என்று போலீசார் கண்டுபிடித்தனர். அவர் எதற்காக சாத்தனுார் வந்தார், அவரை கொன்றது யார் என்று தெரியவில்லை.
ஆற்றில் பாய்ந்த சிலிண்டர் லாரி
யாத்கிர் நாராயணபுரா அருகே கொடேகல் கிராமத்தில் உள்ள, தோனி ஆற்றின் பாலத்தில் நேற்று மதியம், சிலிண்டர் லாரி சென்றது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, தறிகெட்டு ஓடி ஆற்றில் பாய்ந்தது. ஆற்றில் குறைந்த அளவே தண்ணீர் ஓடியதால், டிரைவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். ஆனால் லாரியில் இருந்த சிலிண்டர்கள் ஆற்றில் விழுந்தது. அங்கு வந்த காஸ் நிறுவன ஊழியர்கள், சிலிண்டர்களை எடுத்து, வேறு லாரியில் ஏற்றி அனுப்பினர்.

