ராட்சத அலைக்கு 3 பேர் பலி
மங்களூரு பைக்கம்பாடியில் வசித்தவர்கள் மிலன், 20, லிகித், 18, நாகராஜ், 24. நண்பர்களான மூன்று பேரும், நேற்று முன்தினம் மாலை பனம்பூர் கடற்கரைக்கு சென்று, கடலில் குளித்தனர். அப்போது அங்கு எழுந்த, ராட்சத அலையில் சிக்கி, மூன்று பேரும் உயிரிழந்தனர்.
ரூ.46 லட்சம் தங்கம் சிக்கியது
மங்களூரு பஜ்பே விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம், அபுதாபியில் இருந்து விமானம் வந்தது. அந்த விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலால் பயணியரிடம், சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ஒரு பயணியின் பையில் இருந்து 729 கிராம் எடையுள்ள தங்கம் சிக்கியது. அதன் மதிப்பு 45.92 லட்ச ரூபாய். தங்கம் கடத்திய பயணி கைது செய்யப்பட்டார்.
பண்ணை குட்டையில் 3 பேர் பலி
பெங்களூரு ரூரல் ஹொஸ்கோட் ஜடிகேனஹள்ளி கிராமத்தில் வசித்தவர் மரியப்பா, 70. இவரது மனைவி முனியம்மா, 60. இவர்களின் மகள் பாரதி, 40. நேற்று முன்தினம் மாலை வயலில் வேலை செய்தனர். தண்ணீர் எடுத்து வருவதற்காக, நிலத்தில் அமைக்கப்பட்டு உள்ள பண்ணை குட்டைக்கு பாரதி சென்றார். கால்தவறி குட்டையில் விழுந்தவர் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார். பாரதியை காப்பாற்ற அவரது பெற்றோர் முயன்றனர். ஆனால் அவர்களும் தண்ணீரில் விழுந்து, நீச்சல் தெரியாமல் தத்தளித்தனர். சிறிது நேரத்தில் குட்டையில் மூழ்கி, மூன்று பேரும் இறந்தனர்.
இளம்பெண் தற்கொலை
சாம்ராஜ்நகர் டவுன் சோம்வார்பேட்டையில் வசிப்பவர் சோமேஷ், 30. இவரது மனைவி ரச்சனா, 26. இவர்களுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒரு குழந்தை உள்ளது. ரச்சனாவின் சொந்த ஊரான கொத்தலவாடி கிராமத்தில் நேற்று முன்தினம் திருவிழா நடந்தது. திருவிழாவிற்கு கணவர் அழைத்துச் செல்வார் என்று ரச்சனா நினைத்தார். ஆனால் செல்லவில்லை. இதனால் கணவன், மனைவி இடையில் தகராறு ஏற்பட்டது. மனம் உடைந்த ரச்சனா நேற்று காலை வீட்டில் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
யானை தாக்கி முதியவர் பலி
குடகு மடிகேரி அருகே கலிபீடு பகுதியை சேர்ந்தவர் அப்பாச்சு, 60. திருமணம் ஆகாதவர். தனியாக வசித்தார். நேற்று முன்தினம் மாலை வீட்டின் அருகே உள்ள, வனப்பகுதிக்கு சென்றார். அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய, காட்டு யானை அப்பாச்சுவை தாக்கிக் கொன்றது.
சிலிண்டர் வெடித்து 7 பேர் காயம்
பாகல்கோட் பீலகி கடகரா ஓனியில் நேற்று முன்தினம் இரவு, லட்சுமி நரசிம்மப்பா என்பவர் வீட்டில், காஸ் சிலிண்டர் வெடித்தது. இதில் லட்சுமி நரசிமப்பா உட்பட அவரது குடும்பத்தை சேர்ந்த ஏழு பேர் தீக்காயம் அடைந்தனர். பாகல்கோட் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
பல்லாரியின் 5 பேர் பலி
ஆந்திராவின் மெகபூப்நகர் கோட்டகோடா புறவழிச்சாலையில் நேற்று இரவு 8:00 மணிக்கு ஒரு கார் சென்றது. டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர மரத்தில் மோதியது. விபத்து பற்றி அறிந்ததும் போலீசார் அங்கு சென்று, காரில் இருந்தவர்களை மீட்க முயன்றனர். ஆனால் ஒரு பெண் குழந்தை உட்பட நான்கு பேர் இறந்தது தெரிந்தது.
உயிருக்கு போராடிய இன்னொரு குழந்தை, மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல், குழந்தையும் இறந்தது.
உயிரிழந்தவர்கள், கர்நாடகாவின் பல்லாரியை சேர்ந்த பாத்திமா, 50, அப்துல் ரகுமான், 30, மரியா, 32, இவரது பிள்ளைகள் வசீம், 1, புஸ்ரா, 2, ஆகியோர் என்பது தெரிந்தது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள் ஐந்து பேரும், பல்லாரியில் இருந்து ஹைதராபாத் சென்றது தெரிய வந்துள்ளது.

