'குடிநீர் இணைப்புக்கு அதிக கட்டணம் வசூலித்தால் கிரிமினல் வழக்கு பாயும்'
'குடிநீர் இணைப்புக்கு அதிக கட்டணம் வசூலித்தால் கிரிமினல் வழக்கு பாயும்'
ADDED : அக் 29, 2024 07:58 AM
பெங்களூரு: 'காவிரி குடிநீர் இணைப்பு வழங்க, பொதுமக்களிடம் லஞ்சம் வாங்கினால் கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்படும்' என பெங்களூரு குடிநீர் வாரியம் எச்சரித்துள்ளது.
பெங்களூரில் புதிதாக காவிரி குடிநீர் இணைப்பு பெற்றுத் தருவதாக கூறி, பொதுமக்களிடம் இடைத்தரகர்கள் அதிகமான பணம் வசூலிக்கின்றனர்.
சமீபத்தில் மாநகராட்சிக்கு உட்பட்ட 110 கிராமங்களுக்கு, காவிரி குடிநீர் வினியோகம் துவங்கப்பட்டது.
இந்த கிராமங்களின் வீடுகளுக்கு, குடிநீர் இணைப்பு பெற பலரும் இடைத்தரகர்களின் உதவியை நாடுகின்றனர். இதை சாதகமாக பயன்படுத்தி, பெருமளவில் பணம் வசூலிக்கின்றனர். சிலர் பணத்தை வாங்கிக் கொண்டு, தலைமறைவான சம்பவங்களும் நடந்துள்ளன. இதை தீவிரமாக கருதிய குடிநீர் வாரியம், இடைத்தரகர்களை எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக, குடிநீர் வாரிய தலைவர் ராம் பிரசாத் மனோகர் வெளியிட்ட அறிக்கை:
காவிரி குடிநீர் இணைப்பு அளிப்பதை, சில இடைத்தரகர்கள் தவறாக பயன்படுத்துகின்றனர்.
மக்களிடம் சட்டவிரோதமாக பணம் பெறுவதாக புகார்கள் வந்துள்ளன. மக்களிடம் பணம் வாங்குவோர் மீது, கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்படும்.
காவிரி குடிநீர் இணைப்பு பெறுவது, மிகவும் எளிதானது. ஆன்லைன் வழியாக விண்ணப்பித்தால் போதும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள், குடிநீர் இணைப்பு அளிக்க நடவடிக்கை எடுப்பர். வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், வர்த்தக கட்டடங்களுக்கு விதிமுறைப்படி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை விட கூடுதல் கட்டணம் வசூலித்தால், நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்கப்படும்.
குடிநீர் வாரிய ஊழியர்கள், அசோசியேஷன் உறுப்பினர்கள், இடைத்தரகர்கள் என, அதிக பணம் கேட்பது யாராக இருந்தாலும், நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒரு வேளை யாராவது பணம் கேட்டால், bwssbvigilance@gmail.com இணைய தளத்தில் புகார் அளியுங்கள்.
புகார் அளிப்பவர் பற்றிய விபரங்கள், ரகசியமாக வைக்கப்படும். புகார் வந்த 24 மணி நேரத்துக்குள், விஜிலென்ஸ் குழுவினர் நடவடிக்கை எடுப்பர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.