ADDED : டிச 13, 2024 02:37 AM
பெங்களூரு,இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு மையம் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:
விண்கலங்களை சுமந்து செல்லும் ராக்கெட்களில் கிரையோஜெனிக் இன்ஜின் பயன்படுத்தும் ஒரு சில நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது.
இது, இந்தியா அனுப்பிய ஆறு ராக்கெட்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கும் இந்த இன்ஜின் தேர்வாகியுள்ளது.
இந்நிலையில், இந்த இன்ஜினின் திறனை மேம்படுத்துவதற்காக பல புதிய சோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.
அதன்படி, தமிழகத்தின் திருநெல்வேலியின் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ மையத்தில், கடந்த நவ., 29ம் தேதி புதிய சோதனை நடத்தப்பட்டது.
கடல் மட்டத்தில் இருந்து ராக்கெட்டை அனுப்புவது தொடர்பாக இந்த இன்ஜின் பரிசோதிக்கப்பட்டது.
இது மிகவும் முக்கியமான மற்றும் சிக்கலான சோதனை. கடல் மட்டத்தில் உள்ள வெப்பத்தை தாங்கும் திறன் போன்ற சோதனை நடத்தப்பட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

