ADDED : ஜன 28, 2024 12:34 AM

உலக, தேசிய, தமிழக நடப்புகள் குறித்து தினமலர் நாளிதழுக்கு வாசகர்கள் எழுதிய கடிதம்
மணிபிரபு, கம்பம், தேனி மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
ராமர் கோவிலின் பிராண பிரதிஷ்டை விழா மிக சிறப்பாகவும், கோலாகலமாகவும் நடந்து முடிந்துள்ளது. புராண காலத்தில் நடந்த ராமர் பட்டாபிஷேகத்தை யாரும் பார்த்திருக்க முடியாது; இதை நம்மில் பலருக்கு காணும் பாக்கியம் கிடைத்தது.
பல்வேறு கட்டட மற்றும் சிற்ப கலைஞர்களின் உழைப்பிலும், இன்னும் பல ஊழியர்களின் உழைப்பிலும் உயர்ந்து நிற்கிறது அயோத்தி. இதற்கு முழு காரணம் பிரதமர் மோடி என்றால் மிகையாகாது.
இளையராஜா கூறியது போல், எத்தனையோ பிரதமர்கள் வந்து போனாலும், மோடியால் தான் அயோத்தி ராமர் கோவில் சாத்தியமானது. தனக்கு கோவில் கட்ட ராமர் தேர்ந்தெடுத்த மனிதர் தான் மோடி.
மக்கள் பணியை மகத்தான முறையில் நிறைவேற்றுபவர், தனக்கு கோவிலும் கட்டுவார் என்று நம்பி, ராமர் பணியை கொடுத்தார்; மோடியும் அதை கச்சிதமாக செய்து முடித்துள்ளார்.
தொடர்ந்து, 11 நாட்கள் நீராகாரம், பழங்கள் மட்டுமே உண்டு, தரையில் படுத்து கடும் விரதம் இருந்து, தன்னை வருத்தி, ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை வெற்றிகரமாக நடத்தியுள்ளார்.
தான் உயர்ந்த பதவியில் உள்ளோம் என்ற ஆணவம் துளியும் இல்லாமல், அனைவரிடமும் பவ்யமாக ஆசி வாங்குகிறார். தமிழக கோவில்களிலும் அவரின் பணிவு வெளிப்பட்டது.
அன்று, ராமர் - -சீதையை சேர்த்து வைத்து அனுமன் சாதித்ததை போல, இன்று ராமருக்கு கோவில் எழுப்பி நிகழ்கால அனுமனாக சாதித்துள்ளார் மோடி.
இந்த சிறப்புக்கு பிரதிபலனாக, ராமரே மீண்டும் மோடியை ஜெயிக்க வைத்து, மூன்றாவது முறையாக அரியணையில் அமர்த்துவார். அதையடுத்து, நிஜமான ராமராஜ்ஜியம் நாட்டில் மலரும் என்பதில் அணுவளவும் சந்தேகம் இல்லை!

