"சைக்கிள் ஓட்டுங்க: ஆயுசை கூட்டுங்க": ஆய்வில் வெளியான "குட்நியூஸ்"
"சைக்கிள் ஓட்டுங்க: ஆயுசை கூட்டுங்க": ஆய்வில் வெளியான "குட்நியூஸ்"
UPDATED : ஜூலை 18, 2024 02:36 PM
ADDED : ஜூலை 18, 2024 02:13 PM

புதுடில்லி: 'சைக்கிள் ஓட்டுவதால் முன்கூட்டியே மரணமடைவது 47 சதவீதம் குறைகிறது' என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இதனால் சைக்கிள் பயன்படுத்துவதை அதிகரித்தால், ஆயுள் நாட்கள் அதிகரிக்கும் என்பது உறுதியாகி உள்ளது.
வீட்டு அருகில் இருக்கும் கடை முதல், தூரமாக இருக்கும் கடை வரை எங்கு சென்றாலும் பைக்கில் செல்வது தற்போது வழக்கமாகிவிட்டது. முந்தைய காலங்களில் சைக்கிள் ஓட்டி, வியர்வை சிந்தி நாம் சென்றடைய வேண்டிய இடத்திற்கு செல்லும் நிலை, தற்போது தலைகீழாக மாறிவிட்டது. இந்நேரத்தில், சைக்கிள் பயன்படுத்துவதை அதிகரித்தால், ஆயுள் நாட்கள் அதிகரிக்கும் என ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.
16வயது முதல் 74 வயதுக்குட்பட்ட 82 ஆயிரம் பேரை 18 ஆண்டுகளாக பிரிட்டன் ஆய்வாளர்கள் கண்காணித்து, ஆய்வு ஒன்று நடத்தி உள்ளனர். இந்த ஆய்வு குறித்த தகவல்கள், பி.எம்.ஜி பப்ளிக் ஹெல்த் (BMJ Public Health) பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.
மரணம் தள்ளி போகுது..!
அந்த கட்டுரையில் கூறியிருப்பதாவது: சைக்கிள் பயன்படுத்துபவருக்கு, மற்றவர்களை காட்டிலும் முன்கூட்டியே மரணம் ஏற்படும் அபாயம் 47 சதவீதம் குறைவாக உள்ளது.
அதேபோல், புற்றுநோயால் உயிரிழப்பது 51 சதவீதமும், இருதய கோளாறுகளால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது 24 சதவீதமும், மனநல கோளாறு ஏற்படுவது 20 சதவீதமும் குறைவாக உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.