நாளை கரையை கடக்குது 'டாணா' புயல்; ஒடிசாவில் 10 லட்சம் பேர் இடமாற்றம்
நாளை கரையை கடக்குது 'டாணா' புயல்; ஒடிசாவில் 10 லட்சம் பேர் இடமாற்றம்
ADDED : அக் 24, 2024 09:24 AM

புதுடில்லி: வங்கக்கடலில் மையம் கொண்டிருக்கும் 'டாணா' புயல் தீவிர புயலாக வலுப்பெற்ற நிலையில் நாளை (அக்.,25) ஒடிசா- மேற்குவங்கம் இடையே கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள புயல், வடமேற்கு திசை நோக்கி மணிக்கு 13 கி.மீ., வேகத்தில் மெதுவாக நகர்ந்து வருகிறது. தற்போது அது ஒடிசாவின் தென்கிழக்கே 490 கி.மீ., தொலைவில் நிலைகொண்டு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலானது, ஒடிசாவின் பித்ராகானிகா தேசிய பூங்கா மற்றும் தாம்ரா துறைமுகத்துக்கு இடையே நாளை(அக்.,25) காலை கரையை கடக்கக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கரை கடக்கும் போது கனமழையுடன், மணிக்கு 120 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் எனவும், வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் கேந்திராபாரா, பாத்ராக், பாலசோர் உட்பட 14 மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் 10 லட்சம் பேரை, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒடிசா மாநில அரசு அப்புறப்படுத்தியுள்ளது.
ஒடிசா மற்றும் மேற்கு வங்கம் உட்பட ஐந்து மாநிலங்களில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் உள்ளனர். ஒடிசாவில் உயர்நீதிமன்றம் இரண்டு நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது.புவனேஸ்வர் விமான நிலையத்தில் 16 மணி நேரம் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. புயல் காரணமாக கிழக்கு மற்றும் தென்கிழக்கு ரயில்வே அக்டோபர் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் ஏராளமான ரயில்களை ரத்து செய்துள்ளன.
இதேபோல் அண்டை மாநிலமான மேற்கு வங்கத்திலும் டானா புயலால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ளும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அம்மாநில அரசும் மேற்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.