நாடு கடத்தப்படுவதை தவிர்க்க தாதா லாரன்ஸ் சகோதரர் முயற்சி
நாடு கடத்தப்படுவதை தவிர்க்க தாதா லாரன்ஸ் சகோதரர் முயற்சி
ADDED : நவ 21, 2024 06:45 AM

புதுடில்லி: அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் அன்மோல், நாடு கடத்தப்படுவதில் இருந்து தப்பிக்க, அந்நாட்டில் தஞ்சம் கோரி விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பஞ்சாபைச் சேர்ந்த பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய், குஜராத்தின் சபர்மதி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் இருந்தபடி, பிரபல பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா கொலைக்கு மூளையாகச் செயல்பட்டார்.
மஹாராஷ்டிராவின் மும்பையில் உள்ள பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதற்கு லாரன்ஸ் பிஷ்னோய், அவரது சகோதரர் அன்மோல் பிஷ்னோய் பொறுப்பேற்றனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன், தேசியவாத காங்., மூத்த தலைவரும், மஹாராஷ்டிரா முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக், மும்பையில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்துக்கும், பிஷ்னோய் சகோதரர்கள் பொறுப்பேற்றனர்.
கடந்த 2023ல், போலி பாஸ்போர்ட் வாயிலாக அமெரிக்காவுக்கு தப்பிச் சென்ற அன்மோல் பிஷ்னோய், அங்கிருந்தபடி நம் நாட்டில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகிறார். மும்பை போலீசார் கோரிக்கையின்படி, அவருக்கு எதிராக, 'ரெட் கார்னர்' எனப்படும் தேடப்படும் நபர் என்பதற்கான நோட்டீசை, 'இன்டர்போல்' எனப்படும் சர்வதேச போலீஸ் வெளியிட்டது.
இதற்கிடையே, போலி ஆவணங்களை பயன்படுத்தி அமெரிக்காவுக்குள் நுழைந்ததாக, சமீபத்தில், கலிபோர்னியாவில் அன்மோல் பிஷ்னோயை அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்தனர். தற்போது அவர், சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அன்மோல் பிஷ்னோயை நாடு கடத்துவதற்கான சட்ட நடவடிக்கைகளை மும்பை போலீசார் துவங்கியுள்ள நிலையில், அமெரிக்காவில் தஞ்சம் கேட்டு, அந்நாட்டு அதிகாரிகளிடம் அவர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவால் தேடப்படும் பிரபல தாதாவான கோல்டி பிரார், சில ஆண்டுகளுக்கு முன், அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். எனினும் அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது. அன்மோல் பிஷ்னோய்க்கு ஜாமின் வழங்கப்படும் என்றும், அவரை நாடு கடத்துவதற்கான வாய்ப்பு குறைவு என்றும் கூறப்படுகிறது.