ADDED : ஜன 10, 2025 07:11 AM
பெங்களூரு: கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பின், ஏழு மாதத்திற்கு பிறகு தர்ஷன், அவரது தோழி பவித்ரா இன்று நீதிமன்றத்தில் ஆஜராகும் போது, நேருக்கு நேர் சந்திக்க வாய்ப்பு உள்ளது.
கன்னட திரை உலகின் முன்னணி நடிகர் தர்ஷன் 47. இவரது தோழி பவித்ரா, 34. இவருக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பியதாக, கடந்த ஆண்டு ஜூன் 8ம் தேதி, சித்ரதுர்காவை சேர்ந்த ரேணுகாசாமி என்ற தர்ஷனின் ரசிகர் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் தர்ஷன், பவித்ரா உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் இருந்தபோது சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தாலும் தர்ஷன், பவித்ரா ஒருவரை ஒருவர் சந்தித்து கொள்ளவில்லை.
பவித்ராவை பார்க்க தர்ஷன் விரும்பவில்லை என்றும் சொல்லப்பட்டது. கொலை வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்ட போதும், வீடியோ கான்பரன்ஸ் மூலம் அனைவரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில் கொலை வழக்கில் தர்ஷன், பவித்ரா உட்பட 12 பேருக்கு உயர்நீதிமன்றம் கடந்த மாதம் ஜாமின் வழங்கியது. சிறையில் இருந்து வெளியே வந்ததும் தர்ஷன் பெயரில் பவித்ரா கோவிலில் பூஜை செய்தார். இதனால் இருவருக்கும் இடையில் மீண்டும் நட்பு மலரும் என்று கூறப்பட்டது. ஆனாலும் அதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படாமல் இருந்தது.
இந்நிலையில், கொலை வழக்கு தொடர்பான விசாரணை பெங்களூரு 57வது சிட்டி சிவில் நீதிமன்றத்தில் இன்று நடக்க உள்ளது. விசாரணைக்கு ஆஜராகும்படி ஜாமினில் உள்ள 12 பேருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இன்று நடக்கும் விசாரணையின் போது தர்ஷன், பவித்ரா ஆகியோர் ஒருவரை ஒருவர் ஏழு மாதத்திற்கு பின் நேருக்கு நேராக பார்க்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது.