தந்தையை கோணிப்பையில் அடைத்து கூரியர் பார்சலில் அனுப்ப முயன்ற மகள்!
தந்தையை கோணிப்பையில் அடைத்து கூரியர் பார்சலில் அனுப்ப முயன்ற மகள்!
UPDATED : மார் 19, 2026 08:05 AM
ADDED : மார் 18, 2026 10:58 PM

பெங்களூரு: 'ரீல்ஸ்' செய்யும் நோக்கில், தந்தையை கோணிப்பையில் அடைத்து, கூரியரில் பார்சல் அனுப்ப முற்பட்ட மகளின் செயலால், பெங்களூரில் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடக மாநிலம், பெங்களூரு, வையாலிகாவல் விநாயகா சதுக்கத்தில், தனியார் கூரியர் நிறுவனம் உள்ளது. நேற்று முன்தினம் மாலை 4:30 மணியளவில், இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேர் வெள்ளை நிற கோணி மூட்டையுடன் கூரியர் நிறுவனத்துக்கு வந்தனர்.
'மூட்டையை மங்களூருக்கு அனுப்ப வேண்டும்' என்றனர். 'அதில் என்ன உள்ளது' என, ஊழியர்கள் கேட்ட போது, பதில் கூறாமல் மவுனமாக இருந்தனர்.
அசைந்த மூட்டை
அப்போது மூட்டை அசைவதை கண்டு அதிர்ச்சியடைந்த கூரியர் ஊழியர், மூட்டையை திறந்து பார்த்தபோது, உள்ளே 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் இருப்பது தெரிந்தது. அவர் மூச்சு விட சிரமப்பட்டார்; அவரால் பேசவும் முடியவில்லை.
ஊழியர்கள் உடனடியாக அவரை தண்ணீர் குடிக்க வைத்தனர். மூட்டை கொண்டு வந்தவர்களி டம் கேட்டபோது, 'நாங்கள் கஷ்டப்பட்டு மூட்டையை கொண்டு வந்தோம். தேவையான பணம் தருகிறோம். அவரை பார்சலில் மங்களூருக்கு அனுப்புங்கள்' என, பிடிவாதம் பிடித்தனர்.
இதனால், அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது. கூரியர் ஊழியர்கள், வையாலிகாவல் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். இதனால் அந்நபர்களும், பெண்களும் மூட்டையில் இருந்த நபருடன், அங்கிருந்து தப்பியோடினர்.
கூரியர் நிறுவனத்துக்கு வந்த போலீசார், அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து, அவர்களை கண்டுபிடித்தனர். போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்த போது, அவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரிந்தது.
ரீல்ஸ் வீடியோ
சுஷ்மிதா, 30, என்பவர் தன் கணவர் மற்றும் குடும்பத்தினருடன் சேர்ந்து, 57 வயதான தன் தந்தையை, கோணிப்பையில் அடைத்து கூரியரில் அனுப்ப முயற்சித்துள்ளார். ரீல்ஸ் வீடியோவுக்காக, இதுபோன்று செய்துள்ளனர். இப்படி செய்தது தவறுதான் என்பதை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டனர்.
போலீசார், 'கோணிப்பையில் அடைக்கப்பட்ட நபரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருந்தால், யார் பொறுப்பு. இப்படிப்பட்ட செயலை செய்யக்கூடாது' என, எச்சரித்து அனுப்பினர்.
சுஷ்மிதா கூறியதாவது: உகாதி மற்றும் ரம்ஜான் பண்டிகை காரணமாக, தனியார் பஸ் கட்டணங்கள் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன. பஸ்களில் சீட் கிடைக்கவில்லை. இதை மக்களுக்கு விவரிக்கும் நோக்கில், ஒரு வீடியோ தயாரித்தோம்.
நாங்கள் ஐந்து பேர் சேர்ந்து, என் தந்தையை, அவரது சம்மதத்துடன் கோணிப்பையில் கட்டி, கூரியர் அலுவலகத்துக்கு கொண்டு சென்றோம். இது தவறு என்பது, எங்களுக்கு தெரியவில்லை. போலீசார் கூறிய பின், தவறை உணர்ந்தோம். எனவே மன்னிப்பு கேட்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

