மசோதாக்களில் கவர்னருக்கு காலக்கெடு; தமிழக உத்தரவு கேரளாவுக்கு பொருந்துமா?: விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்
மசோதாக்களில் கவர்னருக்கு காலக்கெடு; தமிழக உத்தரவு கேரளாவுக்கு பொருந்துமா?: விசாரிக்கிறது உச்ச நீதிமன்றம்
ADDED : ஏப் 23, 2025 05:10 AM

புதுடில்லி : மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்க கவர்னர்களுக்கு காலக்கெடு நிர்ணயித்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, கேரளா தொடர்ந்துள்ள வழக்குக்கும் பொருந்துமா என விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மசோதாக்கள் மீது முடிவெடுப்பதில் காலதாமதம் செய்வதாக, கவர்னருக்கு எதிராக தமிழக அரசு வழக்கு தொடர்ந்திருந்தது. இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், மசோதாக்கள் மீது முடிவு எடுக்க கவர்னர்களுக்கு காலக்கெடு விதித்து சமீபத்தில் உத்தரவிட்டது. மேலும், கவர்னர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது முடிவு எடுக்க ஜனாதிபதிக்கும் கால நிர்ணயம் செய்தது.
இதற்கிடையே, தற்போது பீஹார் கவர்னராக உள்ள ஆரிப் முகமது கான் கவர்னராக இருந்தபோது, மசோதாக்கள் மீது முடிவு எடுப்பதில் காலதாமதம் செய்தது தொடர்பாக, கேரள அரசு, 2023ல் வழக்கு தொடர்ந்தது. கேரள கவர்னரின் இந்த நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், தமிழகம் தொடர்ந்த வழக்கில் அளித்த உத்தரவு, இந்த வழக்குக்கும் பொருந்தும் என, உத்தரவிடக் கோரி, கேரள அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா, ஜாய்மால்யா பகிச்சி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'கேரள அரசு தொடர்ந்த வழக்கின் சாராம்சம், தமிழக அரசின் வழக்கில் இருந்து வேறுபட்டது' என, மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணி, கேரள கவர்னர் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டனர்.
இதையடுத்து, தமிழக அரசு வழக்கின் உத்தரவு, கேரள வழக்குக்கும் பொருந்துமா என்பது குறித்து விசாரிப்பதாக அமர்வு கூறியுள்ளது. வழக்கின் விசாரணை, மே 6ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

