போலீஸ் கஸ்டடி மரணம்; என்ன சொல்லப்போகிறார் முதல்வர் ஸ்டாலின்? இ.பி.எஸ்., கேள்வி
போலீஸ் கஸ்டடி மரணம்; என்ன சொல்லப்போகிறார் முதல்வர் ஸ்டாலின்? இ.பி.எஸ்., கேள்வி
ADDED : நவ 25, 2024 02:15 PM

சென்னை: புதுக்கோட்டையில் போலீஸ் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட இளைஞன் உயிரிழந்தது குறித்து முதல்வர் ஸ்டாலின் என்ன சொல்லப்போகிறார் என்று இ.பி.எஸ்., கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில்; புதுக்கோட்டையில் போலீஸ் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட விக்னேஷ்வரன் என்ற இளைஞர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வருகின்றன. தி.மு.க., ஆட்சியில் ஒருபுறம் போதைப்பொருள் புழக்கத்திற்கு எதிராகவும், சட்டம் ஒழுங்கைக் காக்கவும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுப்பதில்லை; மறுபுறம் காவல் நிலைய மரணங்கள் என்பதும் தொடர்கதையாகி உள்ளது.
சென்னையில் நடந்த விக்னேஷ் (எ) விக்னா காவல் நிலைய மரணத்தின் போது நான் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பிய போதே, பச்சைப்பொய் பேசியவர் தான் இன்றைய முதல்வர் முதல்வர், காவல் நிலைய மரணங்கள் தொடர்வதும், அதனை தி.மு.க., அரசு அதன் அதிகாரத்தைக் கொண்டு மூடி மறைக்க முயல்வதும் கண்டனத்திற்குரியது.
ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரணத்தின் போது, சட்டத்திற்கு உட்பட்டு கழக ஆட்சி செயல்பட்ட போதும், 'மனித உரிமை' என்ற சொல்லையே தாம் தான் கண்டுபிடித்தாற்போல் வானத்திற்கும், பூமிக்கும் முழங்கிய ஸ்டாலின், இன்று அவரது ஆட்சியில் தொடரும் காவல் நிலைய மரணங்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?, எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.