ADDED : அக் 23, 2024 11:56 PM

பாபுசாப்பாளையா : பெங்களூரில் புதிதாக கட்டப்பட்டு வந்த ஏழு மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில், மேலும் 5 பேர் உடல்கள் நேற்று மீட்கப்பட்டன. இதனால் பலி எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது.
பெங்களூரின் கே.ஆர்.புரம் தொகுதிக்கு உட்பட்ட பாபுசாப்பாளையாவில், ஆந்திராவை சேர்ந்த முனிராஜ் ரெட்டி என்பவர், ஏழு மாடி கட்டடம் கட்டி வந்தார். நேற்று முன்தினம் மாலை 4:00 மணியளவில், அந்த கட்டடம் சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்தது.
தலையில் பலத்த காயத்துடன் வெளியே வந்த வடமாநில தொழிலாளி ஒருவர், கட்டடத்திற்குள் மேலும் பலர் சிக்கியிருப்பதாக கண்ணீர்மல்க, அப்பகுதி மக்களிடம் கூறினார்.
தகவல் அறிந்த தீயணைப்பு படையினர், தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினர், சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஜே.சி.பி., இயந்திரம் மூலம் கட்டட இடிபாடுகளை அகற்றும் பணி நடந்தது.
இடிபாடுகளில் சிக்கி இறந்த பீகார் மாநிலத்தின் ஹார்மன், 26, டிரிபால், 35, முகமது சாகில், 19, ஆகியோரின், உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் 14க்கும் மேற்பட்டவர்கள், இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பதாக கூறப்பட்டது. இதனால் மீட்புப் பணி, நேற்று முன்தினம் இரவு முழுவதும் நடந்தது.
உடல்கள் மீட்பு
துணை முதல்வர் சிவகுமாரும் சம்பவ இடத்தை பார்வையிட்டு, மாநகராட்சி அதிகாரிகள், ஒயிட்பீல்டு டி.சி.பி., தேவராஜிடம் இருந்து தகவலை பெற்றுக் கொண்டார்.
சிக்கியவர்களை மீட்கும் பணியில் சிரமம் ஏற்பட்டதால், மோப்ப நாய் உதவியுடன் சிக்கியவர்களை தேடும் பணி நடந்தது. நேற்று காலை பெங்களூரை சேர்ந்த சத்யராஜ், 25, சங்கர் ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டன.
தொடர்ந்து நடந்த மீட்புப் பணியில் நேற்று மாலை, மேலும் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இவர்களின் பெயர் உடனடியாக தெரியவில்லை. இதையடுத்து பலி எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது. இதில் மீட்புப் பணி தொடர்கிறது.
நேற்று மாலை வரை உயிருடன் 14 தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கவனிக்கவில்லை
ஹென்னுார் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், நான்கு மாடிக்கட்டடம் கட்ட மட்டுமே, மாநகராட்சியிடம் முனிராஜ் ரெட்டி அனுமதி வாங்கியதும், ஆனால் ஏழு மாடிக்கட்டடம் கட்டியதும் தெரிந்தது. இதை மாநகராட்சி அதிகாரிகளும் கவனிக்கவில்லை.
முனிராஜா ரெட்டியின் மகன் புவன் ரெட்டி, ஒப்பந்ததாரர் முனியப்பா ஆகிய இருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலும் முனிராஜ் ரெட்டி, கட்டட இன்ஜினியர் உட்பட சிலர் மீது வழக்குப்பதிவாகி உள்ளது.
மாநகராட்சி அதிகாரிகள் மீதும் வழக்குப்பதிய வேண்டும் என்று, பாபுசாப்பாளையா மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.