வெள்ள நிவாரணம் குறித்த விவாதம்: திமுக - பா.ஜ., எம்.பி.,க்கள் வாக்குவாதம்
வெள்ள நிவாரணம் குறித்த விவாதம்: திமுக - பா.ஜ., எம்.பி.,க்கள் வாக்குவாதம்
UPDATED : பிப் 06, 2024 02:58 PM
ADDED : பிப் 06, 2024 12:12 PM

புதுடில்லி: தமிழகத்திற்கு வெள்ள நிவாரணம் வழங்க வேண்டும் என லோக்சபாவில் திமுக எம்.பி.,க்கள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பான விவாதத்தின்போது திமுக - பா.ஜ., எம்.பி.,க்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம் கேட்ட வெள்ள நிவாரணத்தை வழங்க வேண்டும் என லோக்சபாவில் திமுக எம்.பி.,க்கள் கோரிக்கை விடுத்தனர். திமுக.,வின் ஆ.ராசா பேசுகையில், ''தமிழகத்திற்கு வெள்ள நிவாரணம் வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது. வெள்ள நிவாரணம் குறித்து கேள்வி எழுப்பினால் மத்திய அமைச்சர்கள் பொறுப்பற்ற முறையில் அலட்சியமாக பதில் அளிக்கின்றனர்.
தமிழகத்தில் 2 பெரிய புயல்கள் அடுத்தடுத்து தாக்கின. முதல்வர் ஸ்டாலின் ரூ.37 ஆயிரம் கோடி நிவாரணம் கேட்டபோதும் மத்திய அரசு ஒரு காசு கூட வழங்கவில்லை.
மத்திய அமைச்சர் குழப்பம்
நிதி வழங்குவது தொடர்பாக எந்த உறுதியையும் அமைச்சர் தனது பதிலில் அளிக்கவில்லை. மாநில பேரிடர் நிதி என்பது வேறு, தேசிய பேரிடர் நிதி என்பது வேறு. மாநில பேரிடர் நிதி என்பது அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு வழங்குவது. மாநில பேரிடர் நிதியை வழங்கியதை வெள்ள நிவாரண நிதி வழங்கியதாக அமைச்சர் குழப்பி கொள்கிறார்.
வெள்ள சேதங்கள் தொடர்பான தமிழக அரசு அளித்த அறிக்கை மற்றும் மத்திய அரசு குழு அளித்த அறிக்கை மத்திய அரசிடம் உள்ளது. 2 அறிக்கைகள் கையில் உள்ளபோதும் மத்திய அரசு தமிழகத்துக்கு வெள்ள நிவாரணம் வழங்க மறுக்கிறது.
குஜராத்தை போல அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு சமமாக நடத்த வேண்டும். தமிழகத்தை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துகிறது. இவ்வாறு ஆ.ராசா பேசினார்.
விளக்கம்
அப்போது இடைமறித்த உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்தா ராய், 'அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு சமமாக நடத்துகிறது. தமிழகத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டபோது பிரதமர் மோடி நிலைமையை உன்னிப்பாக கவனித்தார். தமிழகத்திற்கு மாநில பேரிடர் நிதி முழுமையாக ஒதுக்கப்பட்டுள்ளது' என விளக்கமளித்தார். 'பிற மாநிலங்களில் வெள்ள பாதிப்பை சென்று பார்த்த பிரதமர் மோடி, தமிழகத்துக்கு வராதது ஏன்?' என மதிமுக எம்.பி., கணேசமூர்த்தி கேள்வி எழுப்பினார். இதே கேள்வியை காங்கிரஸ் எம்.பி., மாணிக்கம் தாகூரும் முன்வைத்தார்.
டி.ஆர்.பாலு பேசுகையில், 'தமிழகத்தில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டதற்கு சரியாக வானிலையை கணிக்கத் தவறிய மத்திய அரசின் அமைப்பே காரணம்' எனப் பேசியபோது மத்திய அமைச்சர் எல்.முருகன் தொடர்ந்து குறுக்கிட்டார். இதனால் ஆவேசமடைந்த டி.ஆர்.பாலு, 'மத்திய அமைச்சர் தொடர்ந்து எனது பேச்சில் குறுக்கிடுகிறார். அவர் எம்.பி.,யாக பதவி வகிப்பதற்கே தகுதியற்றவர். அவரை வெளியே அனுப்புங்கள். அமைச்சராக இருந்தாலும் பார்லி.,யில் ஒரு ஒழுங்குடன் நடந்துகொள்ள வேண்டும். விவாதத்தில் பங்கேற்க உங்களுக்கு தைரியம் இல்லை, தயவு செய்து அமருங்கள்' என்றார்.
இதனையடுத்து திமுக - பா.ஜ., எம்.பி.,க்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பட்டியலின மத்திய அமைச்சரை டி.ஆர்.பாலு தவறாக பேசியதாக கூறி பா.ஜ., எம்.பி.,க்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் திமுக எம்.பி.,க்கள் வெளிநடப்பு செய்தனர்.
ஓட்டு வங்கி
இது குறித்து எல்.முருகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: சமூகநீதியில் திமுகவுக்கு நம்பிக்கை இல்லை. பார்லி.,யில் பயன்படுத்தக்கூடாத வார்த்தையை டி.ஆர்.பாலு பயன்படுத்தினார். பட்டியலின மக்களை ஓட்டு வங்கியாகவே தி.மு.க., பயன்படுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
அவைக்குறிப்பில் இருந்து நீக்கம்
முன்னதாக, டி.ஆர்.பாலுவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ., எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டதோடு, மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோஷமிட்டனர். இதையடுத்து, டி.ஆர்.பாலுவின் பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.
