ADDED : நவ 18, 2025 07:16 AM

பெலகாவி: பெலகாவி உயிரியல் பூங்காவில் நேற்று மேலும் ஒரு மான் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 31ஆக உயர்ந்துள்ளது.
கர்நாடக மாநிலம், பெலகாவி மாவட்டத்தில் உள்ள கித்துார் ராணி சென்னம்மா மிருகக்காட்சி சாலையில், அடுத்தடுத்து மான்கள் உயிரிழந்தன. நேற்று முன்தினம் மேலும் ஒரு மான் உயிரிழந்தது.
முதற்கட்ட பரிசோதனையில், எச்.எஸ்., எனப்படும், 'ஹிமோரேஜிக் செப்டிசிமீயா' என்ற பாக்டீரியா தாக்குதலால் இறந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்த நோய் தாக்கி, 24 மணி நேரத்திற்குள், விலங்குகள் இறக்கின்றன. இந்நிலையில், நேற்றும் ஒரு மான் உயிரிழந்தது. இதன்மூலம், இறந்த மான்களின் எண்ணிக்கை, 31ஆக உயர்ந்து உள்ளது.
தற்போது மிருகக்காட்சி சாலையில் உள்ள ஏழு மான்களை காப்பாற்றும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு உள்ளனர்.
இதற்காக பெங்களூரு பன்னரகட்டா மிருகக்காட்சி சாலையில் இருந்து வந்துள்ள சிறப்பு மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதற்கிடையில், பூங்கா நிர்வாகிகள், அதிகாரிகளுடன், மாவட்ட பொறுப்பு வகிக்கும் பொதுப்பணித் துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி, நேற்று ஆலோசனை நடத்தினார்.
அப்போது, மற்ற விலங்குகளுக்கும் இந்நோய் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே கூறுகையில், ''எச்.எஸ்., எனும் பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டதால், மான்கள் இறந்திருக்கலாம். மற்ற மான்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிகாரிகள் நிலைமையை கண்காணித்து வருகின்றனர். இந்நோய் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது,'' என்றார்.

