ADDED : மார் 29, 2025 07:23 PM

புதுடில்லி:ஆம் ஆத்மி மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான சவுரவ் பரத்வாஜ் மீது அவதூறு வழக்கு தொடர, தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுவை, சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ஆம் ஆத்மி அரசின் சுகாதாரத் துறை அமைச்சராக பதவி வகித்த சவுரவ் பரத்வாஜ், 2018ல் தனக்கு எதிராக அவதூறாக கருத்து கூறியதாக, பா.ஜ.,வைச் சேர்ந்த சூரஜ் பான் சவுகான் என்பவர், டில்லி பெருநகர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், கடந்த ஆண்டு பிப்ரவரியில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை மாஜிஸ்திரேட் தள்ளுபடி செய்தார்.
இதையடுத்து, எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி.,க்கள் மீதான வழக்கை விசாரிக்கும், சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த ஆண்டு டிசம்பரில் சீராய்வு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு, சிறப்பு நீதிமன்ற நீதிபதி விஷால் கோக்னே முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
முன்னதாக, இந்த மனுவை நிராகரித்த மாஜிஸ்திரேட், '2018ல் அவதூறு கூறியவர் மீது 2024ல் மனு தாக்கல் செய்வது ஏற்புடையதல்ல. மூன்றாண்டுகளுக்குள் புகார் செய்ய வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தாமதம் ஆனதற்காக, மனுதாரர் மன்னிப்புக் கோருவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது' என தன் உத்தரவில் கூறியிருந்தார்.
இதையடுத்தே, மாஜிஸ்திரேட் உத்தரவை எதிர்த்து, சிறப்பு நீதிமன்றத்தில் சூரஜ் பான் சவுகான் மனுத்தாக்கல் செய்தார்.