மகளிர் ஆணைய தலைவி குறித்து அவதூறு: மஹூவா மொய்த்ரா மீது வழக்கு
மகளிர் ஆணைய தலைவி குறித்து அவதூறு: மஹூவா மொய்த்ரா மீது வழக்கு
ADDED : ஜூலை 07, 2024 06:06 PM

புதுடில்லி: தேசிய மகளிர் ஆணைய தலைவி ரேகா ஷர்மாவை அவதூறாக விமர்சித்து சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்ட திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., மஹூவா மொய்த்ரா மீது, புதிய கிரிமினல் சட்டத்தின் கீழ் டில்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம் கிருஷ்ணா நகர் தொகுதி எம்.பி., மஹூவா மொய்த்ரா. திரிணமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர், கடந்த ஆண்டு லோக்சபாவில் கேள்வி கேட்க லஞ்சம் வாங்கியதற்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், உ.பி., மாநிலம் ஹாத்ரசில் ஆன்மிக நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்த இடத்தில் தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா ஆய்வு செய்தார். அப்போது, அவருக்கு குடை பிடித்தபடி ஒருவர் நின்ற வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகின. இது குறித்து, ரேகா சர்மாவை அவதூறாக விமர்சிக்கும் வகையில் சமூக வலைதளத்தில் மஹூவா மொய்த்ரா கருத்து தெரிவித்து இருந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த மகளிர் ஆணைய தலைவி, விளக்கம் கேட்டு மஹூவா மொய்த்ராவுக்கு நோட்டீஸ் அனுப்பினார். அதற்கு பதிலளிக்காத இவர், சமூக வலைதளத்தில் டில்லி போலீசை மேற்கோள் காட்டி தன் மீது நடவடிக்கை எடுக்கும்படி பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில், தேசிய மகளிர் ஆணையம் அளித்த புகாரின் அடிப்படையில் மஹூவா மொய்த்ரா மீது டில்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.