ரூ.3.25 லட்சம் கோடியில் 114 ரபேல் போர் விமானங்கள் வாங்க மத்திய அரசு திட்டம்
ரூ.3.25 லட்சம் கோடியில் 114 ரபேல் போர் விமானங்கள் வாங்க மத்திய அரசு திட்டம்
ADDED : ஜன 13, 2026 10:27 PM

புதுடில்லி: ரூ.3.25 லட்சம் கோடி மதிப்பில் 114 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து விரைவில் முடிவெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேசன் நிறுவனம் ரபேல் போர் விமானங்களை தயாரித்து வருகிறது. இந்த நிறுவனத்திடம் இருந்து 36 விமானங்களை இந்தியா வாங்கி விமானப்படையில் இணைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது ரபேல் விமானங்கள் பயன்படுத்தப்பட்டன. மேலும் கடற்படைக்கு என 26 ரபேல் விமானங்களை வாங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
அடுத்த தலைமுறை போர் விமானங்களை தயாரிக்க இந்தியா ஆர்வம் காட்டி வருகிறது. அமெரிக்காவின் எப் 35 மற்றும் ரஷ்யாவின் சூ -57 போர் விமானங்களை இந்தியாவிடம் விற்க அந்நாடுகள் தயாராக உள்ளன.
இருப்பினும் பிரான்சில் தயாராகும் ரபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா திட்டமிட்டு உள்ளது. 3.25 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் 114 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு திட்டமிடப்பட்டு உள்ளது.அதில் 12 - 18 விமானங்கள் பறக்கும் நிலையில் வாங்கி விமானப்படையில் இணைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. மற்றவை மேக் இன் இந்தியா திட்டத்தில் 30 சதவீத உள்நாட்டு பொருட்களை பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
மேலும் இரு நாட்டு அரசுகளுக்கு இடையிலான ஒப்பந்தப்படி, இந்த விமானங்களில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களை பொருத்த வழி ஏற்படுத்தவும் பிரான்ஸ் நிறுவனத்திடம் வலியுறுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான ஒப்பந்தம் தொடர்பாக, மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தில் அடுத்த சில நாட்களில் உயர்மட்ட கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஒப்பந்தத்துக்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் இறுதியாக பாதுகாப்புக்கான மத்திய அமைச்சரவை குழுவின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இந்த ஒப்பந்தத்துக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கும் பட்சத்தில், இந்தியாவில் மிகப்பெரிய பாதுகாப்பு ஒப்பந்தமாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

