போர் விமானங்கள் கிடைப்பதில்... தாமதம் ! விமானப்படை தளபதி அதிருப்தி
போர் விமானங்கள் கிடைப்பதில்... தாமதம் ! விமானப்படை தளபதி அதிருப்தி
UPDATED : ஜன 09, 2025 03:50 AM
ADDED : ஜன 09, 2025 03:22 AM

புதுடில்லி: ''உள்நாட்டு தயாரிப்பான தேஜஸ் ரக போர் விமானங்கள் 4-0 வாங்குவதற்கு, 2010ல் ஒப்பந்தம் செய்தும் இன்னும் கிடைக்கவில்லை,'' என, நம் விமானப் படைத் தளபதி ஏ.பி.சிங் அதிருப்தி தெரிவித்துள்ளார். எண்ணிக்கை மற்றும் தொழில்நுட்பத்தில் அண்டை நாடுகளின் அச்சுறுத்தல்களை சமாளிப்பதில் இது சிக்கலை ஏற்படுத்துவதாக அவர் கவலை தெரிவித்தார்.
டில்லியில் நேற்று முன்தினம் நடந்த, 21வது சுப்ரதோ முகர்ஜி நினைவு கருத்தரங்கில், நம் விமானப் படைத் தளபதி ஏ.பி. சிங் பேசியதாவது:
சீனா சமீபத்தில் ஆறாவது தலைமுறை போர் விமானத்தை பரிசோதித்துள்ளது. உலகிலேயே, ஆறாவது தலைமுறை போர் விமானத்தை தயாரித்துள்ள முதல் நாடாக நம் அண்டை நாடான சீனா உள்ளது.
சீனா அச்சுறுத்தல்
நம் நாட்டில், ஐந்தாவது தலைமுறை போர் விமானத்தை தயாரிப்பதற்கான வடிவமைப்பு முயற்சிகள் சமீபத்தில்தான் துவங்கியுள்ளன. எண்ணிக்கையில் மட்டுமல்ல, தொழில்நுட்பத்திலும் சீனா மிக வேகமாக முன்னேறி வருகிறது.
எல்லையில் சீனாவின் அச்சுறுத்தல் உள்ள நிலையில், நம் விமானப் படைக்கு போதிய எண்ணிக்கையில் போர் விமானங்கள் தேவை.
கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த எச்.ஏ.எல்., எனப்படும் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனம், உள்நாட்டு தயாரிப்பான தேஜஸ் ரக இலகு ரக போர் விமானங்களை தயாரிக்கிறது.
கடந்த 1984ல் இந்த விமானத்தை உருவாக்குவதற்கான முயற்சி துவங்கியது. அதற்கு, 17 ஆண்டுகளுக்குப் பின், 2001ல் தான் முதல் தேஜஸ் போர் விமானம் பறந்தது. அதற்கு, 15 ஆண்டுகளுக்குப் பின், 2016ல் தான், முதல் தேஜஸ் போர் விமானம், விமானப் படையில் சேர்ந்தது.
அதிகளவில் முதலீடு
இதற்கிடையே, 2010ல், 40 தேஜஸ் போர் விமானங்கள் வாங்குவதற்காக தனியாக ஒரு ஒப்பந்தம் செய்தோம். ஆனால், 15 ஆண்டுகளாகியும், இதுவரை, ஒரு போர் விமானம் கூட வந்து சேரவில்லை.
இதுதான் நம் நாட்டின் உற்பத்தி திறனாக உள்ளது. இதை மேம்படுத்துவதற்கு, தனியார் துறையினரை அதிகளவில் இதில் ஈடுபடுத்த வேண்டும். அப்போதுதான் போட்டி ஏற்படும்; உற்பத்தி அதிகரிக்கும். தொழில்நுட்பம் தாமதம் என்பது தொழில்நுட்பம் மறுப்பாகவே இருக்கும். அதனால், தொழில்நுட்பத்தை மேம்படுத்திக் கொள்வதுடன், உற்பத்தியையும் நாம் வேகப்படுத்த வேண்டும்.
விமானம், ஆயுதத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், தங்கள் உற்பத்தியை அதிகரிப்பதற்கான வசதியை ஏற்படுத்திக்கொள்ள அதிகளவில் முதலீடுகள் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நம் விமானப் படைக்கு, தலா, 18 போர் விமானங்கள் உள்ள, 42 ஸ்குவாட்ரன் அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆனால், தற்போது 30 ஸ்குவாட்ரன் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன.

