சஞ்சய் சிங் எம்.பி., பதவியேற்க டில்லி கோர்ட் மீண்டும் அனுமதி
சஞ்சய் சிங் எம்.பி., பதவியேற்க டில்லி கோர்ட் மீண்டும் அனுமதி
ADDED : பிப் 06, 2024 08:59 PM

புதுடில்லி: சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த எம்.பி., சஞ்சய் சிங், ராஜ்யசபா எம்.பி.,யாக பதவி ஏற்க மீண்டும் டில்லி கோர்ட் அனுமதி அளித்தது.
கடந்த 2018 முதல் ஆம் ஆத்மி ராஜ்யசபா எம்.பி.,யாக பதவி வகிப்பவர் சஞ்சய் சிங், 51. இவரது பதவிக்காலம் முடிவுக்கு வந்ததை அடுத்து இரண்டாவது முறையாக ராஜ்யசபா எம்.பி.,யாக போட்டியின்றி தேர்வானார். இவருடன், சக கட்சியை சேர்ந்தவர்கள் ராஜ்யசபா எம்.பி.,யாக போட்டியின்றி தேர்வாகி கடந்த மாதம் 31ல் பதவி ஏற்றனர்.
சஞ்சய் சிங் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கடந்தாண்டு அக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
நீதிமன்ற காவலில் உள்ள அவர் ராஜ்யசபா எம்.பி.,யாக பொறுப்பேற்க கடந்த 3-ம் தேதி டில்லி நீதிமன்றம் அனுமதி வழங்கியதை தொடர்ந்து அவர் நேற்று (04-ம் தேதி ) எம்.பி.,யாக பதவியேற்க இருந்தது. ராஜ்யசபா தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜக்தீப் தன்கர் அனுமதி மறுத்தார்.
மீண்டும் அனுமதி கோரி டில்லி கோர்ட்டில் சஞ்சய் சிங் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி மீண்டும் அனுமதி அளித்தார். ஊழல் வழக்கில் சிறையில் உள்ள அவர், பதவி ஏற்கலாமா என்பது குறித்து ராஜ்யசபா ஒழுங்கு நடவடிக்கை குழு ஆய்வு செய்து வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில் எப்போது பதவியேற்பார் என தேதி குறிப்பிடவில்லை.

