ADDED : நவ 29, 2024 12:06 AM

பாகல்குன்டே; பெங்களூரில் மசாஜ் சென்டரில் வேலை செய்து வந்த டில்லி இளம்பெண் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
டில்லியை சேர்ந்தவர் மோனிகா, 24. இரண்டு மாதங்களுக்கு முன், பெங்களூருக்கு வந்தார். எட்டாவது மைல் பகுதியில் உள்ள மசாஜ் சென்டரில் மாதம் 30,000 ரூபாய் சம்பளத்திற்கு வேலைக்கு சேர்ந்தார்.
பாகல்குன்டேயில் வாடகைக்கு வீடு எடுத்து தனியாக வசித்தார். நேற்று காலை வழக்கமான நேரத்திற்கு, அவர் வேலைக்கு வரவில்லை.
இதனால் மசாஜ் சென்டர் உரிமையாளர், மோனிகாவின் மொபைல் நம்பருக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் அவர் போனை எடுக்கவில்லை. சந்தேகம் அடைந்த மசாஜ் சென்டர் உரிமையாளர், மோனிகா தங்கி இருந்த வீட்டிற்கு சென்றார். கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. பலமுறை தட்டியும் திறக்கவில்லை.
இதனால், பாகல்குன்டே போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அங்கு வந்த போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, மோனிகா துாக்கில் சடலமாக தொங்கியதை கண்டனர்.
அவர் தற்கொலை செய்தது தெரிந்தது. காரணம் தெரியவில்லை. மசாஜ் சென்டர் உரிமையாளர், சக ஊழியர்களிடம் விசாரணை நடக்கிறது.