முன்னாள் ராணுவ தளபதி எழுதிய புத்தகம் கசிவு: டில்லி போலீஸ் வழக்குப்பதிவு
முன்னாள் ராணுவ தளபதி எழுதிய புத்தகம் கசிவு: டில்லி போலீஸ் வழக்குப்பதிவு
ADDED : பிப் 09, 2026 09:41 PM

புதுடில்லி: முன்னாள் ராணுவ தளபதி நரவானே எழுதி வெளியிடப்படாத புத்தகம் ஆன்லைனில் வெளியாகி உள்ளது தொடர்பாக டில்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்திய ராணுவத்தின் முன்னாள் தளபதி நரவானே, தனது பணிக்காலத்தில் ஏற்பட்ட அனுபவம் குறித்து ' Four Stars of Destiny' என்ற பெயரில் புத்தகம் ஒன்றை எழுதி உள்ளார். இது இன்னும் வெளியிடப்படவில்லை.
ஆனால், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது பேசிய காங்கிரஸ் கட்சி எம்பி ராகுல், இந்த புத்தகத்தில் உள்ளதாக கூறி சில விஷயங்கள் பற்றி பேசினார். சீனா உடனான மோதலின் போது மத்திய அரசின் நிலைப்பாடு குறித்து விமர்சித்து பேசினார். இதற்கு லோக்சபாவில் மத்திய அரசும், சபாநாயகரும் எதிர்ப்பு தெரிவிக்க அமளி ஏற்பட்டது. இதனால், லோக்சபா தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், புத்தகம் இன்னும் வெளிவராத நிலையில் அது சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது குறித்து டில்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த புத்தகத்தின் பிடிஎப் பக்கங்கள் சமூக ஊடகங்கள் மற்றும் சில இணையதளங்களில் வெளியாகி உள்ளது. இது குறித்து டில்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த புத்தகத்தின் அட்டைப்படத்தை போட்டு, விற்பனைக்கு தயார் என்ற நிலையில் இணைய தளங்களில் காட்டி உள்ளனர். நிலைமையின் முக்கியத்துவம் கருதி வழக்குப்பதிவு செய்துள்ள டில்லி போலீசார் தனிப்பிரிவு அமைத்து விசாரணையை துவக்கி உள்ளனர்.
புத்தகம் வெளியான இடம், அதனை சமூகஊடகங்களில் பதிவேற்றம் செய்தவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

