ADDED : மே 30, 2026 10:42 PM

டில்லியில், பிரதமர் மோடி, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை சந்தித்தார், தமிழக முதல்வர் விஜய். மோடியை குறைந்த நேரம் தான் சந்தித்தார் முதல்வர். ஆனாலும், இந்த சந்திப்பில் பல விஷயங்கள் பேசப்பட்டன. விஜயின் வெற்றியைப் பாராட்டிய மோடி, அவருக்கு சில ஆலோசனைகள் அளித்தாராம்.
'நீங்கள் உட்பட அமைச்சர்கள் அனைவருமே புதியவர்கள். அரசு செயல்படுவது எப்படி என்பது குறித்து, அமைச்சர்களுக்கு ஒருங்கிணைப்பு பயிற்சி ஆலோசனை கூட்டம் நடத்துங்கள். அது, உங்களுக்கு பெரும் பயனுள்ளதாக இருக்கும்' என, முதல்வரிடம் பிரதமர் கூறினாராம்.
மேலும், மற்றொரு முக்கிய விஷயத்தையும் கூறினாராம். 'நான் எப்போதும் என் அமைச்சர்களுக்கும், எம்.பி.,க்களுக்கும் சொல்லும் ஒரு விஷயத்தையும் உங்களுக்கு தெரிவிக்கிறேன். நிருபர்களுடனோ அல்லது தெரியாத ஆட்களுடனோ பேசும் போது, மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
'ரகசிய கேமரா வாயிலாக நீங்கள் பேசுவதை பதிவு செய்து, உங்களையோ அல்லது அமைச்சர்களையோ மாட்டிவிட முயற்சிகள் நடக்கலாம். இதை உங்கள் அமைச்சர்களுக்கும், எம்.எல்.ஏ.,க்களுக்கும் தெரிவித்து, மிகவும் கவனமுடன் பணியாற்ற சொல்லுங்கள்' என்றாராம் பிரதமர் மோடி.
தமிழகத்திற்கு ஆனைமங்கல செப்பேடுகள் விரைவில் அனுப்பப்படும். அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன எனவும் தெரிவித்தாராம் பிரதமர். விஜயின் நிதானம், அமைதியாக இருக்கும் தன்மை, எதற்கும் உடனே பதில் தராமல் அமைதியாக யோசித்து பேசுவது போன்றவற்றை பிரதமர் மோடி ரசித்ததாக சொல்லப்படுகிறது.
சாதகம்!
பி ரதமர் மோடியை சந்தித்த தமிழக முதல்வர் விஜய், கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார். அந்த மனுவில் நலத்திட்டங்களுக்கு நிதி உதவி, மேகதாது அணை விவகாரம் என, பல விஷயங்களை குறிப்பிட்டிருந்தார்.
மனுக்களை ஆராய்ந்து, இந்த மனுக்கள் மீது மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்து, தமிழக அரசுக்கு உதவ முடியும் என ஒரு, 'நோட்' போட்டு, தனக்கு தெரிவிக்கும்படி, தன் இரண்டாவது முதன்மை செயலரான, சக்திகாந்த தாசுக்கு உத்தரவிட்டுள்ளாராம் மோடி.
தமிழக கேடரைச் சேர்ந்த சக்திகாந்த தாஸ், ஓய்வுபெற்ற மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி; ரிசர்வ் வங்கியின் கவர்னராக பதவி வகித்தவர். தற்போது, பிரதமர் அலுவலகத்தில் மோடிக்கு இரண்டாவது முதன்மை செயலர் -பதவியில் உள்ளார். இவர், தமிழக முதல்வர் விஜயை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
கேபினட் செயலர் பதவி, மத்திய அரசின் முக்கிய பதவி. அனைத்து துறை செயலர்களாக உள்ள ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு தலைவர் இந்த கேபினட் செயலர். இந்த பதவியில் இருப்பவர், தமிழகத்தைச் சேர்ந்த டி.வி.சோமநாதன். இவரும் விஜயை சந்தித்துள்ளார்.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை, அவரது அலுவலகத்தில் சந்தித்து தமிழகத்திற்கு நிதி உதவி வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தினார் முதல்வர் விஜய். அமைச்சகத்தில் பணியாற்றும் தமிழர்கள் உட்பட பலரும், விஜயுடன், 'செல்பி' எடுத்துக் கொண்டனராம்.
நிராகரிப்பு!
ஒ ருவழியாக, கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்து, சிவகுமார் முதல்வர் பதவியில் அமர வழி கொடுத்துள்ளார் சித்தராமையா. கடந்த, 2023ல், கர்நாடக சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வை தோற்கடித்து, மாபெரும் வெற்றி பெற்றது காங்கிரஸ். 'வெற்றிக்கு நான் தான் காரணம். அதனால் முதல்வர் பதவி எனக்கு வேண்டும்' என, பிடிவாதமாக இருந்தார் சிவகுமார்.
சித்தராமையா முதல் இரண்டரை ஆண்டுகளும், அடுத்த இரண்டரை ஆண்டுகள் சிவகுமாரும் முதல்வர் பதவியில் இருக்கட்டும்' என, காங்., மேலிடம் முடிவெடுத்தது. ஆனால், இரண்டரை ஆண்டுகள் முடிந்தும் சித்தராமையா முதல்வர் பதவியை விட்டுக் கொடுக்கவில்லை. கடைசியாக, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுலின் உத்தரவால் தயக்கத்துடனேயே ராஜினாமா செய்தார்.
பதவியிலிருந்து விலகினாலும், ஆட்சியில் முக்கிய பங்கு வகிக்க ஒரு திட்டம் வகுத்தார் சித்தராமையா. கட்சிக்கும், அரசுக்கும் இடையே சுமுகமான உறவு தொடர, ஒருங்கிணைப்பு குழுவை தன் தலைமையில் அமைக்க வேண்டும் என, ராகுலிடம் வேண்டுகோள் வைத்தாராம்.
கடந்த, 2018- - 19ல், மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் எச்.டி.குமாரசாமி முதல்வராக இருந்த போது, இப்படி ஒரு ஒருங்கிணைப்பு குழு காங்கிரசுக்கும், மதச்சார்பற்ற ஜனதா தளத்திற்கும் இடையே அமைக்கப்பட்டது. அதன் தலைவராக இருந்தவர் தான் சித்தராமையா. அதே போல இந்த முறையும் வேண்டும் என, ஆசைப்பட்டார்.
இந்த குழுவின் தலைவராக சித்தராமையா இருந்தால், முதல்வராக சிவகுமாரை செயல்பட விடாமல் பிரச்னைகளை ஏற்படுத்துவார் என்பதை உணர்ந்து, முடியாது என கறாராக சொல்லி விட்டாராம் ராகுல். மேலும், 'காங்கிரசுக்கு மெஜாரிட்டி இருக்கும் போது, எதற்கு இந்த ஒருங்கிணைப்பு குழு' என்றும் கூறினாராம்.
ஒருங்கிணைப்பு குழு தான் போயிற்று... தன் மூத்த மகன் யதீந்திராவிற்கு, துணை முதல்வர் பதவியும், தன் ஆதரவாளர்களுக்கு அமைச்சர் பதவியும் வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளாராம் சித்தராமையா. 2023 சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் யதீந்திரா. பின், எம்.எல்.சி., ஆக்கப்பட்டார். அவரது துணை முதல்வர் ஆசைக்கு ராகுல் ஒத்துக்கொள்வாரா என்பது அமைச்சரவை பதவி ஏற்கும் போது தெரியவரும்.
ரகசியம்! அ மெரிக்கா - இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 'மூன்று நாடுகளும் அமைதி ஒப்பந்தத்திற்கு தயாராக உள்ளது' என்று செய்திகள் வந்தாலும், எப்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்த போரால், ஈரான் அருகே உள்ள ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பெட்ரோலிய பொருட்கள் வருவது பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் உலக நாடுகள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகின்றன. இந்தியாவில் இதன் பாதிப்பு கடுமையாக உள்ளது. சமீபத்தில் பலமுறை பெட்ரோல், டீசல், 'காஸ்' விலை உயர்த்தப்பட்டுள்ளது.
'பெட்ரோலிய பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை' என, மத்திய அரசு கூறி வந்தாலும், வளைகுடா நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் இந்தியா வருவது, பெரும் பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது.
'ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் வந்தால் தாக்குவோம்' என, ஈரான் அறிவித்து தாக்குதலும் நடத்தியுள்ளது. இதற்கிடையே, அமெரிக்காவின் போர்க்கப்பல்களும் இந்த பகுதியில் முகாமிட்டுள்ளன. இந்தியாவிற்கு பெருமளவில் கச்சா எண்ணெய், சமையல் எரிவாயு கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக வருகின்றன. தற்போது, 10க்கும் மேற்பட்ட இந்திய கப்பல்கள் கச்சா என்ணெய், காஸ் ஏற்றி அங்கு காத்துக் கிடக்கின்றன.
சில கப்பல்கள் இந்த வழியாக இந்தியாவிற்கு வந்துவிட்டன; மற்றவை வந்து கொண்டிருக்கின்றன. 'பாதுகாப்பில்லாத ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்திய கப்பல்கள் எப்படி வருகின்றன' என்று கேட்டால், 'இது ரகசியம்; வெளியே சொல்ல முடியாது' என, அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது.
நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ஈரான் அரசிடம் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம், மத்திய கப்பல் துறை அமைச்சகம், 'வார் ரூம்' ஒன்றை அமைத்துள்ளது. இந்திய கடற்படையின் ஒருங்கிணைப்புடன், ஹார்முஸ் ஜலசந்தி வழியாக இந்தியா வரும் கப்பல்களின் நடவடிக்கைகளை, 24 மணி நேரமும் இந்த வார் ரூம் கண்காணித்து வருகிறது. அத்துடன், தாக்குதலை தவிர்க்க எந்த வழியில் வர வேண்டும் என, கப்பல் கேப்டன்களுக்கு ஆலோசனையும் வழங்கி வருகிறது.
