மும்பையில் பரவும் டெங்கு: கட்டுப்படுத்த தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா புது ‛ஐடியா'
மும்பையில் பரவும் டெங்கு: கட்டுப்படுத்த தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா புது ‛ஐடியா'
UPDATED : ஆக 25, 2024 04:07 PM
ADDED : ஆக 25, 2024 03:45 PM

புதுடில்லி: மும்பையில் பரவும் டெங்குவை கட்டுப்படுத்த, பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, வீடியோ ஒன்றை வெளியிட்டு புது ஐடியா ஒன்றை கொடுத்துள்ளார்.
இது குறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: மும்பையில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவதால், அதற்கு காரணமான கொசுக்களைத் தேடி அழிக்கக்கூடியே இந்த மினியேச்சர் பீரங்கியை எப்படி வாங்குவது என்று கண்டுபிடிக்க முயற்சி செய்கிறேன். உங்கள் வீட்டிற்கான அயர்ன் டோம்( அயர்ன் டோம் என்பது, தனது நாட்டின் மீது எதிரிகள் ஏவும் ஏவுகணைகள், ராக்கெட்களை மறித்து அழிக்க இஸ்ரேல் உருவாக்கிய வான் பாதுகாப்பு அமைப்பின் பெயர் ஆகும்) '' எனக்கூறி அந்தவீடியோவை அவர் வெளியிட்டு உள்ளார்.
சிறிய ஏவுகணை தடுப்பு அமைப்பு போல் செயல்படும் இந்த கருவியை சீனாவைச் சேர்ந்த பொறியாளர் வடிவமைத்துள்ளார். இதில் உள்ள ரேடார் அமைப்பு மூலம் கொசுவை குறிவைத்து லேசர் மூலம் அதனை கொல்கிறது. கொசுக்களை கண்டறிய மின்சார கார்களின் ரேடரை மாற்றியமைத்து இந்த சாதனத்தை உருவாக்கி உள்ளார்.
ஆனந்த் மஹிந்திராவின் பதிவுக்கு ஏராளமானோர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

