ADDED : பிப் 18, 2024 01:13 AM

கோல்கட்டா, மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.
இவரது அமைச்சரவையில் வனம் மற்றும் தொழிற்சாலை சீரமைப்பு துறை அமைச்சராக இருந்தவர் ஜோதிப்ரியா மாலிக்.
இவர், ஏற்கனவே உணவு பாதுகாப்பு அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். அப்போது ரேஷன் பொருட்கள் வினியோக திட்டத்தில் பல கோடி ரூபாய் ஊழலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.
இதை விசாரித்த அமலாக்கத்துறை, ஜோதிப்ரியா மாலிக் மீது சட்டவிரோத பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து, கடந்த ஆண்டு அக்டோபரில் அவரை கைது செய்தது.
இருப்பினும் அவர் வனம் மற்றும் தொழிற்சாலை மறுசீரமைப்பு அமைச்சராக நீடித்து வந்தார். இந்நிலையில், நேற்று முதல்வர் மம்தா பானர்ஜி அறிவுறுத்தலின் அடிப்படையில், மாலிக்கை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கி கவர்னர் உத்தரவிட்டார்.