தீவிரமாக வீடு தேடும் கெஜ்ரிவால் அரசு பங்களாவை விரைவில் காலி செய்கிறார்
தீவிரமாக வீடு தேடும் கெஜ்ரிவால் அரசு பங்களாவை விரைவில் காலி செய்கிறார்
ADDED : செப் 28, 2024 07:19 PM
புதுடில்லி:முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், சிவில் லைன்ஸ் அரசு பங்களாவை விரைவில் காலி செய்வார் என்றும், புதுடில்லி தொகுதிக்குள்ளேயே புதிய வீடு ஒன்றை தீவிரமாக தேடிக் கொண்டிருக்கிறார் என்றும் ஆம் ஆத்மி கட்சியினர் கூறினர்.
டில்லி அரசின் 2021 - 2022ம் ஆண்டி மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அரசின் புதிய மதுபானக் கொள்கையை ரத்து செய்த துணைநிலை கவர்னர் சக்சேனா, இதுகுறித்து விசாரிக்க சி.பி.ஐ.,க்கு உத்தரவிட்டார்.
சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை ஆகிய விசாரணை அமைப்புகள் வழக்குப் பதிவு செய்து துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா உள்ளிட்டோரை கைது செய்தது. இந்த வழக்கில் முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவாலும் கைது செய்யப்பட்டர். உச்ச நீதிமன்றம் சமீபத்தில் ஜாமின் வழங்கியதை அடுத்து திஹார் சிறையில் இருந்து வந்த கெஜ்ரிவால், தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதைத் தொடர்ந்து, முதல்வருக்கான அரசு பங்களாவை நவராத்திரி காலத்தில் காலி செய்வேன் என கூறியிருந்தார். ஹிந்துக்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான நவராத்தி அக்.,3ல் துவங்குகிறது.
இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் மூத்த நிர்வாகிகள் கூறியதாவது:
அரசு பங்களாவை அரவிந்த் கெஜ்ரிவால் விரைவில் காலி செய்கிறார். புதுடில்லி தொகுதிக்குள் புதிய வீடு தேடும் பணி தீவிரமாக நடக்கிறது. கெஜ்ரிவால் தன் தொகுதியான புதுடில்லி தொகுதிக்குள்ளேயே தன் வீடு இருக்க வேண்டும் என கூறியுள்ளார். டில்லி சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தன் நேரத்தை மக்களுடன் செலவழிக்கவே விரும்புகிறார்.
ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் வீட்டில் தங்குமாறு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
இன்னும் பலர் தங்களுக்கு சொந்தமாக வீட்டில் தங்கிக் கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
டிபன்ஸ் காலனி, பிதம்புரா, ஜோர் பாக், சாணக்யபுரி, கிரேட்டர் கைலாஷ், வசந்த் விஹார் மற்றும் ஹவுஸ்காஸ் ஆகிய பகுதிகளில் தங்கள் வீட்டை வழங்க பலர் முன்வந்துள்ளனர்.
ஆனால், தேசிய கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான கெஜ்ரிவலுக்கு அரசு பங்களாவை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
கெஜ்ரிவால் தன் மனைவி, குழந்தைகள் மற்றும் வயதான பெற்றோருடன் வசித்து வருகிறார்.
ஹரியானாவைச் சேர்ந்த கெஜ்ரிவால் அரசியலுக்கு வருவதற்கு முன், உத்தர பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் உள்ள கவுசாம்பியில் வசித்தார்.
கடந்த 2013ல் முதன் முறையாக டில்லி முதல்வராக பதவியேற்ற பின், புதுடில்லி திலக் லேனில் உள்ள அரசு பங்களாவுக்கு குடிபெயர்ந்தார். அதேபோல, 2015ல் மீண்டும் முதல்வர் ஆனபிறகு பிளாக் ஸ்டாப் ரோடு இல்லத்துக்கு குடிபெயர்ந்தார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.