மேகதாது திட்டத்துக்கு அனுமதி : தேவகவுடா வலியுறுத்தல்
மேகதாது திட்டத்துக்கு அனுமதி : தேவகவுடா வலியுறுத்தல்
ADDED : டிச 05, 2024 10:54 PM

''மேகதாது அணை திட்டத்துக்கு மத்திய அரசு விரைந்து அனுமதி அளிக்க வேண்டும்,'' என, ம.ஜ.த., தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவ கவுடா, ராஜ்யசபாவில் வலியுறுத்தினார்.
முன்னாள் பிரதமரும், மதச் சார்பற்ற ஜனதா தள தலைவருமான தேவ கவுடா, ராஜ்யசபாவில் நேற்று பேசியதாவது:
கர்நாடக மாநிலம் பெங்களூரில் குடிநீர் பிரச்னை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. குடிநீர் பிரச்னை தீவிரமாக உள்ளதால், டேங்கர் மாபியாவினர் மக்களிடம் கொள்ளை அடிக்கின்றனர். பெங்களூரின் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கிடைக்க வேண்டுமானால், மேகதாது அணை திட்டத்துக்கு அனுமதி கிடைக்க வேண்டும்.
அனைத்து அரசியல் கட்சிகளும் அரசியலை ஒதுக்கிவிட்டு மேகதாது திட்டத்துக்கு ஆதரவளிக்க வேண்டும். கர்நாடகாவில் ஆட்சி நடத்திய அனைத்து கட்சிகளும், மேகதாது திட்டத்துக்காக முயற்சித்தன.
ஆனால், இதுவரை வெற்றி கிடைக்கவில்லை. திட்டத்துக்கு அனுமதி அளிக்கும்படி மத்திய அரசிடம் கர்நாடக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. மத்திய அரசு விரைவில் அனுமதி அளிக்க வேண்டும்.
பெங்களூரு நகர் அதி வேகமாக வளர்கிறது. வேலை தேடி நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் பெங்களூரு வருகின்றனர். அனைவருக்கும் அடைக்கலம் அளிக்கும் நகரில் குடிநீர் பிரச்னை மிக அதிகமாக உள்ளது. 1.50 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை உள்ள பெங்களூருக்கு, ஆண்டுக்கு 16 டி.எம்.சி., காவிரி தண்ணீர் மட்டுமே வினியோகிக்கப்படுகிறது.
நகரின் மக்கள் தொகையுடன் ஒப்பிட்டால், இந்த தண்ணீர் மிகவும் குறைவு. இதையே சாதகமாக பயன்படுத்தும் டேங்கர் மாபியாவினர், மக்களிடம் கொள்ளை அடிக்கின்றனர்.
ஒரு டேங்கர் நீருக்கு, 3,000 ரூபாய் வசூலிக்கின்றனர். வெறும் நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பம், மாதந்தோறும் குடிநீருக்காக 20,000 ரூபாய் செலவிடுகிறது. மேகதாது திட்டம் செயல்படுத்தப்பட்டால், நகரின் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- நமது நிருபர் -