sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பம்பையில் பார்க்கிங் அனுமதியால் பக்தர்கள் மகிழ்ச்சி

/

பம்பையில் பார்க்கிங் அனுமதியால் பக்தர்கள் மகிழ்ச்சி

பம்பையில் பார்க்கிங் அனுமதியால் பக்தர்கள் மகிழ்ச்சி

பம்பையில் பார்க்கிங் அனுமதியால் பக்தர்கள் மகிழ்ச்சி


ADDED : நவ 13, 2024 10:50 PM

Google News

ADDED : நவ 13, 2024 10:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சபரிமலை ; மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை நாளை மாலை திறக்கப்படுகிறது. நாளை மறுநாள் அதிகாலை 3:00 மணிக்கு நெய் அபிஷேகத்துடன் இந்த ஆண்டுக்கான மண்டல காலம் தொடங்குகிறது. சிறிய வாகனங்களை பம்பையில் நிறுத்துவதற்கு கேரள உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளதை பக்தர்கள் வரவேற்றுள்ளனர்.

கார்த்திகை முதல் தேதி முதல் 41 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் பூஜை சபரிமலையில் மண்டல காலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த பூஜைகளின் நிறைவாக 41வது நாள் மண்டல பூஜை நடைபெறும், இதற்காக சபரிமலை நடை நாளை மாலை 5:00மணிக்கு திறக்கப்படும். மேல் சாந்தி மகேஷ் நம்பூதிரி நடை திறந்து விளக்கேற்றி கோயிலை வலம் வந்து 18 படிகள் வழியாக கீழே இறங்கி ஆழிகுண்டத்தில் நெருப்பு வளர்ப்பார்.

தொடர்ந்து அங்கு காத்திருக்கும் அடுத்த ஒரு ஆண்டு காலத்திற்கான புதிய மேல் சாந்திகள் சபரிமலை - அருண்குமார் நம்பூதிரி, மாளிகைப்புறம் வாசுதேவன் நம்பூதிரி ஆகியோரை கை பிடித்து அழைத்து சன்னதி முன்பு அழைத்து வருவார்.தொடர்ந்து தந்திரி கண்டரரு ராஜீவரரு புதிய மேல் சாந்திகளுக்கு அபிஷேகம் நடத்துவார். வேறு விசேஷ பூஜைகள் எதுவும் நடைபெறாது. இரவு 11:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.

நவ.16 அதிகாலை 3:00 மணிக்கு நடை திறந்ததும் தந்திரி ஐயப்பன்விக்ரகத்தில் அபிஷேகம் நடத்தி நெய்யபிஷேகத்தை தொடங்கி வைப்பார். தொடர்ந்து பூஜைகள் தொடங்கும்.

தினமும் 80 ஆயிரம் பேர்


தினமும் கணபதி ஹோமம், தொடர்ந்து 7:30க்கு உஷபூஜை, மதியம் 12:30க்கு களபாபிஷேகம், கலசாபிஷேகம் தொடர்ந்து உச்ச பூஜை நடைபெறும். மதியம் ஒரு மணிக்கு நடை அடைக்கப்படும்.

மதியம் 3:00 மணிக்கு நடை திறந்து 6:30 மணிக்கு தீபாராதனையும், 7:00 மணிக்கு புஷ்பாபிஷேகமும் நடைபெறும். மண்டல சீசனில் படி பூஜை கிடையாது. இரவு 10:00 மணிக்கு அத்தாழ பூஜை முடிந்து 11:00க்கு ஹரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும்.

மண்டல சீசனில் தினமும்ஆன்லைன் முன்பதிவு மூலம் 70 ஆயிரம் பேரும், ஸ்பாட் புக்கிங் மூலம் 10 ஆயிரம் பேரும் அனுமதிக்கப்படுகின்றனர். ஸ்பாட் புக்கிங் கவுண்டர் பம்பையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு தேவையான கழிவறை, ரோடு உள்ளிட்ட வசதிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளது. தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் சன்னிதானத்திலும், பம்பையிலும் முகாமிட்டு இந்த பணிகளை கண்காணித்து வருகிறார்.

பம்பை வரை அனுமதி


கடந்த ஆண்டு நிலக்கலில் பார்க்கிங் கிரவுண்டு நிரம்பி வழிந்ததால் நிலக்கலிருந்து பத்தணந்திட்டை வரை வாகனங்கள் அணிவகுத்து நின்றன. 24 மணி நேரம் வரை பக்தர்கள் நடு காடுகளில் சிக்கித் தவித்தனர். இதனால் சிறிய வாகனங்களை பம்பையில் பார்க்கிங் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று தேவசம் போர்டு கேரள உயர்நீதிமன்றத்தில் கோரியது. ஆனால் இது தங்களதுவருவாயை பாதிக்கும் என்று கேரளா அரசு போக்குவரத்து கழகம் எதிர்த்தது.

பம்பை ஹில்டாப் மற்றும் சக்குப்பாலம் பகுதிகளில் பக்தர்களின் சிறிய வாகனங்களை பார்க்கிங் செய்ய அனுமதித்து நீதிபதிகள் அனில் நரேந்திரன், முரளிகிருஷ்ணா உத்தரவிட்டனர்.

கேரள அரசு போக்குவரத்து கழகத்தின் 20 பஸ்களை ஹில்டாப் தொடக்கத்தில் நிறுத்த அனுமதிக்கலாம். எனினும்இதை காவல்துறையும் தேவசம் போர்டும் கண்காணிக்க வேண்டும். பம்பையில் பார்க்கிங் வசதி தற்காலிகமானதுதான் என்று கூறிய நீதிபதிகள் போக்குவரத்து நெரிசல் அல்லது வேறு பிரச்னைகள் ஏற்பட்டால் பம்பையில் வாகனங்களில் நிறுத்தும் முடிவை திரும்ப பெறலாம். கட்டுப்பாடுகளை மீண்டும் விதிக்க அனைத்து அதிகாரமும் காவல்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது, என தீர்ப்பில் கூறியுள்ளனர்.

பம்பையில் சிறிய வாகனங்களை அனுமதித்த கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவை பக்தர்கள் வரவேற்றுள்ளனர். நடை திறக்க ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில்ஏராளமான பக்தர்கள் சபரிமலை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். நுாற்றுக்கணக்கான பக்தர்கள் நேற்று பம்பையில் முகாமிட்டிருந்தனர். இவர்கள் சன்னிதானத்திற்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை. பக்தர்கள் நாளை மதியத்துக்கு பின்னர் பம்பையில் இருந்து சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us