சி.எஸ்.கே., நிர்வாகத்தை சந்திக்க மறுத்த தோனி; கடைசி நிமிடம் வரை காத்திருக்கும் டுவிஸ்ட்
சி.எஸ்.கே., நிர்வாகத்தை சந்திக்க மறுத்த தோனி; கடைசி நிமிடம் வரை காத்திருக்கும் டுவிஸ்ட்
ADDED : அக் 24, 2024 08:51 AM

சென்னை: 2025ம் ஆண்டு நடக்கும் ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடரில் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனி விளையாடுவாரா? மாட்டாரா? என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
2025ம் ஆண்டு ஐ.பி.எல்., கிரிக்கெட் தொடருக்கான ஏலம் அடுத்த மாதம் இறுதியில் நடைபெற இருக்கிறது. இதையொட்டி, அண்மையில் ஐ.பி.எல்., ஏலத்திற்கான விதிகளை பி.சி.சி.ஐ., வெளியிட்டது. அதன்படி, ஒரு அணி வீரர்களை தக்க வைத்து கொள்ளலாம். அதேபோல, ஒரு அணியின் ஏலத் தொகை ரூ.100 கோடியில் இருந்து ரூ.120 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
தக்க வைக்கப்படும் வீரர்களின் பட்டியலை வரும் 31ம் தேதிக்குள் வெளியிட ஐ.பி.எல்., அணிகளுக்கு கெடு விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அதற்கான பணிகளில் அனைத்து அணி நிர்வாகங்களும் ஈடுபட்டுள்ளன.
சென்னை அணியை பொறுத்தவரையில் ருதுராஜ் கெயிக்வாட், ஜடேஜா, பதிரானா மற்றும் தோனி ஆகியோரை தக்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. தோனியை அன்கேப்டு வீரராகவும், ஷிவம் துபேவை ஆர்.டி.எம்., முறையில் தக்க வைத்துக் கொள்ளவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
ஓய்வு முடிவை அறிவிக்க தயாராகியுள்ள தோனி, 2025 ஐ.பி.எல்., தொடரில் விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துள்ளனர். இந்த சூழலில், தோனியின் முடிவு குறித்து தங்களிடம் ஏதும் சொல்லவில்லை என சென்னை அணியின் நிர்வாகம் கூறியிருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, ஏலம் தொடர்பாகவும், அடுத்த ஆண்டு ஐ.பி.எல்., தொடரில் விளையாடுவது குறித்து தோனியை சந்தித்து பேச சி.எஸ்.கே., நிர்வாகம் அனுமதி கேட்டுள்ளது. ஆனால், 28ம் தேதி வரை தன்னை சந்திக்க முடியாது என்று அவர் கூறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து, 29 அல்லது 30ம் தேதிகளில் தோனியை சந்தித்து பேச சென்னை அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த சந்திப்பிற்கு பிறகே, தோனி விளையாடுவாரா? மாட்டாரா? என தெரிய வரும். அடுத்த ஆண்டு நடக்கும் ஐ.பி.எல்., தொடரில் தோனி இம்பேக்ட் வீரராக ஒருசில போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்று தகவல் வெளியாகி வந்தது குறிப்பிடத்தக்கது.