கருவின் பாலினத்தை அறிவித்தாரா? டாக்டருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
கருவின் பாலினத்தை அறிவித்தாரா? டாக்டருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
ADDED : ஜன 05, 2025 06:11 AM
புதுடில்லி: கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை தெரிவித்ததாக தொடரப்பட்ட வழக்கில், டில்லியைச் சேர்ந்த பெண் டாக்டரை விடுவித்து டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.
டில்லியின் ஹரி நகரில் உள்ள ஒரு மருத்துவ பரிசோதனை மையத்தில், கருவின் பாலினம் தெரிவிக்கப்படுவதாக 2020 ஆகஸ்டில் புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து, ஒரு போலி நாடகம் நடத்தப்பட்டது.
இதன்படி, கர்ப்பிணி ஒருவரை பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர். அவருக்கு, அங்குள்ள டாக்டர், மருத்துவ பரிசோதனைகளை செய்தார்.
அந்த பரிசோதனை மையத்தில் உள்ள வேறொருவர், அந்த பெண்ணின் கருவில் இருக்கும் சிசுவின் பாலினத்தை தெரிவித்துள்ளார்.
ஆனால், பரிசோதனை நடத்திய டாக்டர் மீது, போலீசில் வழக்கு தொடரப்பட்டது.
இதை எதிர்த்து, அந்த டாக்டர் தொடர்ந்த வழக்கை விசாரித்த டில்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்த பரிசோதனை மையத்தில், கருவில் உள்ள சிசுவின் பாலினம் தெரிவிக்கப்படுவது தொடர்பாக போலி நாடகம் நடத்தப்பட்டது.
அந்த பரிசோதனை மையத்தைச் சேர்ந்த வேறொருவர், சிசுவின் பாலினத்தை தெரிவித்துள்ளார். ஆனால், டாக்டர் தெரிவித்ததாக பொய் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சட்டத்துக்கு உட்பட்டே டாக்டர் பரிசோதனைகளை செய்துள்ளார். அவர் பாலினத்தை தெரிவித்ததை உறுதி செய்யும் எந்த ஒரு ஆவணத்தையும் தாக்கல் செய்யவில்லை.
அவரது நடைமுறை எதுவும் சட்டத்துக்கு புறம்பானதாக இல்லை. அதனால், அவர் மீதான எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

