மரங்களை அழித்ததா ராணுவம்? பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு
மரங்களை அழித்ததா ராணுவம்? பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு
ADDED : மார் 02, 2024 01:06 AM
புதுடில்லி:
தலைநகர் டில்லியில், கன்டோன்மென்ட் பகுதியில் இருந்த வனப்பகுதியை அழித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்க, ராணுவத்துக்கு டில்லி உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
டில்லியில் உள்ள ஆரவல்லி மலைத்தொடர் அடர்ந்த வனப்பகுதியாக விளங்குகிறது.
நிர்வாக காரணங்களுக்காக 7,784 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட இந்த வனப்பகுதி நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
இந்த வனப்பகுதி ராணுவக் கட்டுபாட்டில் உள்ளது. இங்கு மரங்கள் வெட்டி அழிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக, டில்லி உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து, வழக்கறிஞர்கள் கவுதம் நாராயண், பிரப்சஹய் கவுர் மற்றும் ஆதித்ய பிரசாத் ஆகியோர், சம்பந்தப்பட்ட கன்டோன்மென்ட் பகுதிக்குச் சென்று ஆய்வு செய்தனர்.
அவர்கள், நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், '25 ஏக்கர் பரப்பளவுக்கு மரங்கள் அழிக்கப்பட்டு இருக்கின்றன'என, கூறியிருந்தனர்.
இந்த வழக்கு விசாரணை, நீதிபதி துஷார் ராவ் கெடேலா முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ராணுவம் சார்பில் ஆஜரான மத்திய அரசு வக்கீல், 'ஏற்கனவே உள்ள எல்லைச் சுவர் சீரமைக்கப்பட்டது. அங்கு மரங்கள் வெட்டப்படவில்லை'என்றார்.
இந்த விவகாரத்தில், ஒரு வாரத்துக்குள் விரிவான பதில் அளிக்குமாறு ராணுவத்துக்கு 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வரும் 15ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

