தாய்லாந்து நாட்டுக்கு தப்பி ஓடிய மோசடி நிதி நிறுவன இயக்குநர் கைது
தாய்லாந்து நாட்டுக்கு தப்பி ஓடிய மோசடி நிதி நிறுவன இயக்குநர் கைது
ADDED : ஜன 31, 2025 05:29 AM

புதுடில்லி: ஐ.எப்.எஸ்., என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி பொதுமக்களிடம் இருந்து பல கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்த ஜனார்த்தனன், தாய்லாந்துக்கு தப்பிச் சென்றபோது பிடிபட்டார். பின்னர், நாடு கடத்தப்பட்டு தமிழக போலீசிடம் ஒப்படைக்கப்பட்டார்.
தமிழகத்தின் வேலுார் மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமி நாராயணன், ஜனார்த்தனன், ஜெகன்நாதன் ஆகியோர், ஐ.எப்.எஸ்., என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வந்தனர்.
இவர்கள், முதலீட்டாளர்களுக்கு அதிக வட்டி தருவதாக, 84,000 பேரிடம், 5,900 கோடி ரூபாய் வாங்கி மோசடி செய்து, வெளிநாடுகளுக்கு தப்பிவிட்டனர்.
மோசடி குறித்து, தமிழக காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், சி.பி.ஐ., வாயிலாக, 2023, ஜூன் 21ல், ரெட்கார்னர் நோட்டீசும் வழங்கப்பட்டது. இதையடுத்து, இன்டர்போல் எனப்படும் சர்வதேச போலீசார் உதவியுடன் மூவரையும் தேடி வந்தனர்.
இந்நிலையில், ஆசிய நாடான தாய்லாந்தில் தலைநகர் பாங்காங் விமான நிலையத்திற்கு ஜனார்த்தனன் சமீபத்தில் வந்துள்ளார்.
அவரை, அந்நாட்டு குடியுரிமை அதிகாரிகள் அடையாளம் கண்டு நாடு கடத்தி உள்ளனர். சி.பி.ஐ., அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்துஉள்ளனர்.
இதையடுத்து, ஜனார்த்தனன் நேற்று முன்தினம் இரவு மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டா விமான நிலையத்திற்கு வந்தபோது, சென்னை சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் ஜனார்த்தனன் மட்டும், 87.50 கோடி ரூபாய் மோசடி செய்து இருப்பது தெரியவந்துள்ளது.
இதுபோல, குஜராத்தின் ஆனந்தில், 77 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்தது உள்ளிட்ட குற்றங்கள் தொடர்பாக, வீரேந்திரபாய் மணிபாய் படேல் என்பவர் மீது வழக்கு தொடரப்பட்டது.
அவருக்கு எதிராக, 2004 மார்ச் மாதம் ரெட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருந்தது. தற்போது, அமெரிக்காவில் அவர் பிடிபட்டார். நாடு கடத்தப்பட்டு, ஆமதாபாத் விமான நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட அவர், குஜராத் போலீசிடம் ஒப்படைக்கப்பட்டார்.