'மதச்சார்பின்மை என்ற வார்த்தையை இழிவாக பயன்படுத்துவதால் சமூகத்தில் பிளவு'
'மதச்சார்பின்மை என்ற வார்த்தையை இழிவாக பயன்படுத்துவதால் சமூகத்தில் பிளவு'
ADDED : ஜன 04, 2024 07:03 AM

காங்., முன்னாள் தலைவர் சோனியா:
இந்திய ஜனநாயகத்தின் அடித்தள துாணாக, மதச்சார்பின்மை உள்ளது. ஆனால், தற்போது ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள், மதச்சார்பின்மை என்ற வார்த்தையை இழிவாக பயன்படுத்துகின்றனர்; இதனால், சமூகத்தில் பிளவு ஏற்படுகிறது.
டவுட் தனபாலு:
எந்த மதத்துக்கும் சார்பாகவோ, எதிராகவோ செயல்படாமல் இருப்பது தான் உண்மையான மதச்சார்பின்மை... ஆனா, உங்க கூட்டணியில இருக்கிற தி.மு.க., தலைவர்களின் செயல்பாடுகளை பார்த்தாலே, மதச்சார்பின்மை என்ற வார்த்தையை இழிவாக பயன்படுத்துவது யார் என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுமே!
---
மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன்:
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில், 1.67 கோடி பேர் பயன் அடைந்துள்ளனர். தொடர் சேவையின் வாயிலாக, 4 கோடி பேர் பயனடைந்துள்ள நிலையில், தொழிலாளரை தேடி மருத்துவம் என்ற திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். அந்த வகையில், தொழிற்சாலைகளுக்கே சென்று, மருத்துவ சிகிச்சை அளிக்கும் வகையிலான திட்டமாக, இது அமைய உள்ளது.
டவுட் தனபாலு:
இந்த மாதிரி புது புது திட்டங்களை அறிவிக்கிறது நல்லது தான்... அதே நேரம், அரசு மருத்துவமனைகளை தேடி வர்ற நோயாளிகளுக்கு நல்லபடியா சிகிச்சை அளித்து, அவங்களை குணப்படுத்தி அனுப்புறதுலயும் அக்கறை காட்டுனா, 'டவுட்'டே இல்லாம தங்களை பாராட்டலாம்!
---
பத்திரிகை செய்தி:
சீனர்களுக்கு முறைகேடாக விசா வாங்கி கொடுத்தது தொடர்பான பண மோசடி வழக்கில், விசாரணைக்காக, புதுடில்லியில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகனும், காங்., - எம்.பி.,யுமான கார்த்தி ஆஜரானார். ஏற்கனவே இவர் மீது, ஐ.என்.எக்ஸ்., மீடியா மற்றும் ஏர்செல் - -மேக்சிஸ் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
டவுட் தனபாலு:
தமிழக காங்., தலைவர் பதவியை அலங்கரிக்க வேண்டும் என, கார்த்தி துடியா துடிக்கிறார்... இத்தனை வழக்குல சிக்கியவருக்கு பதவியை குடுத்தா, நாளைக்கு திஹார் ஜெயில்ல இருந்து தான், கட்சி பணியை கவனிப்பாரோ என்ற, 'டவுட்' தான் வருது!