காங்கிரஸ் கூட்டம் 'பிளாப்' - கார்கே காட்டம்: பீகாரில் திணறும் காங்கிரஸ்; யார் பொறுப்பு ?
காங்கிரஸ் கூட்டம் 'பிளாப்' - கார்கே காட்டம்: பீகாரில் திணறும் காங்கிரஸ்; யார் பொறுப்பு ?
UPDATED : ஏப் 22, 2025 01:00 PM
ADDED : ஏப் 22, 2025 10:53 AM

பாட்னா: பீகாரில் காங்., தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே பங்கேற்ற கூட்டத்திற்கு ஆள் வராததால் மாவட்ட தலைவர் ஒருவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
விரைவில் பீகாரில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இம்மாநிலத்தை பொறுத்தவரை பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்து ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் நிதீஷ்குமார் முதல்வராக உள்ளார். ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் மூத்த தலைவர்கள் தொடர்ந்து மக்கள் தொடர்பு பிரசாரங்களை நடத்தி வருகின்றனர்.
35 ஆண்டு காலம் காங்., வனவாசம்
காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சியினர் மெகா கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இரு தரப்பினரும் அரசியல் பணியை துவக்கி உள்ளனர். இதிலும் சுமுகமான நிலை இல்லை. கடந்த 35 ஆண்டு காலமாக பீகாரில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க முடியாத நிலை உள்ளது. தேர்தல் நேரத்தில் மட்டும் பரபரப்பாகும்.
' லெப்ட், ரைட் '
இந்நிலையில் காங்கிரஸ் சார்பில் பீகாரில் சமீபத்தில் ஒரு பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் காங்., தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே பங்கேற்றார். ஆனால் பெருவாரியான கூட்டம் வரவில்லை. அனைத்து சேர்களும் காலியாக கிடந்தன. இதனால் கார்கே கடுப்பானார். பக்ஸார் மாவட்ட காங்கிரஸ் தலைவர் மனோஜ் குமார் பாண்டேவை அழைத்து ' லெப்ட், ரைட் ' வாங்கினார். தொடர்ந்து மாவட்ட தலைவர் பொறுப்பும் பறிக்கப்பட்டது. இதனால் காங்கிரசார் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
கட்சியை வலுப்படுத்தும் பொறுப்பு உயர்மட்டத் தலைமையிடம்தான் அதிகம் உள்ளது, இதுபோன்ற சூழ்நிலையில் ராகுல், கார்கே போன்ற தலைவர்கள் முன்வந்து அதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்கின்றனர் காங்கிரஸ் கட்சியினர்.
பீகாரில் காங்கிரஸின் பரிதாபகரமான நிலைக்கு யார் பொறுப்பு என்ற கேள்வி எழுகிறது. உயர் தலைமைக்கு, குறிப்பாக ராகுலுக்கு எந்தப் பொறுப்பும் இல்லையா? மூன்றாவது கேள்வி, மனோஜ் பாண்டே போன்ற தலைவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதன் மூலம் காங்கிரஸின் நிலைமை மேம்படுமா?