குண்டு வைக்க சதி தீட்டிய வழக்கு டாக்டருக்கு ஆயுள் தண்டனை
குண்டு வைக்க சதி தீட்டிய வழக்கு டாக்டருக்கு ஆயுள் தண்டனை
ADDED : டிச 26, 2024 06:27 AM
பெங்களூரு: குடியரசு தின விழாவில் குண்டு வைத்து சீர்குலைக்க சதி திட்டம் தீட்டிய வழக்கில், டாக்டருக்கு ஆயுள் தண்டனையும், மற்ற இருவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து, என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
டில்லியில் 2015ம் ஆண்டு நடந்த குடியரசு தின விழாவில், அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா கலந்து கொண்டார். குண்டு வைத்து அந்த விழாவை சீர்குலைக்க சதித் திட்டம் தீட்டியதாக, பெங்களூரில் வசித்த உத்தர கன்னடா மாவட்டம், பட்கலைச் சேர்ந்த டாக்டர் இஸ்மாயில் அபிக், அப்துல் சபுர், சதாம் உசேன் ஆகியோரை, புலிகேசிநகர் போலீசார் கைது செய்தனர்.
இவர்கள் இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் என்பதும், பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கூறியபடி, குண்டுவைக்க சதி திட்டம் தீட்டியதும் தெரிந்தது.
மூன்று பேர் மீதும், உபா எனும் சட்டவிரோத செயல்கள் தடுப்பு, ஆயுதத் தடுப்பு சட்டத்தில் வழக்குப் பதிவானது.
இதுகுறித்து அப்போதைய புலிகேசிநகர் ஏ.சி.பி., தம்மையா விசாரணை நடத்தி, மூன்று பேர் மீதும் என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்.
ஒன்பது ஆண்டுகளாக நடந்த வழக்கு விசாரணை முடிந்த நிலையில், நேற்று முன்தினம் நீதிபதி கங்காதர் தீர்ப்பு கூறினார்.
இஸ்மாயில் அபிக்கிற்கு ஆயுள் தண்டனை மற்றும் 1.55 லட்சம் அபராதம்; அப்துல் சபுர், சதாம் உசேனுக்கு தலா 10 ஆண்டுகள் சிறை மற்றும் தலா 95,000 ரூபாய் அபராதம்விதிக்கப்பட்டது.

