பெண் டாக்டர் மீது தாக்குதல்; திருப்பதி மருத்துவமனையில் டாக்டர்கள் திடீர் போராட்டம்!
பெண் டாக்டர் மீது தாக்குதல்; திருப்பதி மருத்துவமனையில் டாக்டர்கள் திடீர் போராட்டம்!
UPDATED : ஆக 25, 2024 09:42 AM
ADDED : ஆக 25, 2024 09:38 AM

திருப்பதி: திருப்பதியில் இரவு பணியில் இருந்த பெண் பயிற்சி மருத்துவரை நோயாளி தாக்கியதைக் கண்டித்து சக மருத்துவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போதை ஆசாமி
இதுபற்றி கூறப்படுவதாவது: பங்கார ராஜூ என்பவர் மதுபோதைக்கு அடிமையானவர். திருமலையில் மதுபானம் கிடைக்காத நிலையில் பித்து பிடித்தவர் போல் மயக்க நிலையில் சுற்றிய அவர், பின்னர் நினைவிழந்து கீழே விழுந்துள்ளார். அவரின் நிலையைக் கண்ட அங்குள்ள சிலர், பங்கார ராஜூவை அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
மயக்கம்
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அவர் திருப்பதி தேவஸ்தானத்துக்குச் சொந்தமான மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு கொண்டு செல்லப்பட்ட சிறிது நேரத்திலேயே மயக்கம் தெளிந்து எழுந்துள்ளார். தம்மை சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியாமல் மருத்துவமனையில் அலப்பறை செய்துள்ளார். மனநோயாளி போன்று நடந்து கொண்ட பங்கார ராஜூ, சிகிச்சை அளித்த பெண் பயிற்சி மருத்துவரை பின்னால் துரத்திச் சென்று கழுத்தை பிடித்து சரமாரியாக தாக்கி இருக்கிறார்.
தாக்குதல்
இந்த சம்பவத்தைக் கண்ட சக மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பலர் தடுத்து, தாக்குதலை நிறுத்தினர். தாக்குதல் சம்பவம் பற்றிய தகவல் மருத்துவமனை முழுவதுமே பரவியது. இதையடுத்து அவர்கள் உடனடியாக மருத்துவமனை வளாகம் முன்பு திரண்டு போராட்டத்தில் குதித்தனர்.
முழக்கம்
மக்கள் உயிர் காக்கும் பணியில் இருக்கும் தங்களுக்கு உயிர் பாதுகாப்பும் நீதியும் வேண்டும் என்று கோரி அவர்கள் முழக்கமிட்டபடி இருந்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவ பகுதிக்கு விரைந்து சென்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களிடம் அவர்கள் பேச்சு நடத்தினர்.
போலீசார் பேச்சுவார்த்தை
தாக்குதல் நடத்திய மனநோயாளி தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருக்கிறார், சிகிச்சை முடிந்த பின்னர் அவரிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி கூறினர். மருத்துவர்கள் போராட்டம் காரணமாக நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் பாதிக்கப்பட்டனர்.
கொல்கத்தாவில் பெண் டாக்டர் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, நாடு முழுவதும் டாக்டர்கள் பாதுகாப்பு கோரி போராட்டம் நடத்தினர்.இந்த நிலையில், திருப்பதியில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது, ஆந்திரா அரசுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.