மெஸ்சியை பற்றி என்னிடம் கேட்காதீர்கள்: நிருபர்கள் சந்திப்பில் கேரள அமைச்சர் கோபம்
மெஸ்சியை பற்றி என்னிடம் கேட்காதீர்கள்: நிருபர்கள் சந்திப்பில் கேரள அமைச்சர் கோபம்
ADDED : அக் 27, 2025 06:17 PM

திருச்சூர்: கால்பந்து வீரர் மெஸ்சியை பற்றி என்னிடம் எந்த கேள்வியும் கேட்காதீர்கள் என்று கேரள விளையாட்டுத்துறை அமைச்சர் அப்துர்ரஹ்மான் கோபத்துடன் கூறினார்.
திருச்சூரில் எருமப்பட்டியில் பள்ளி மைதானத்தின் திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு அம்மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் அப்துர்ரஹ்மான் வந்திருந்தார். அவரிடம் அர்ஜென்டினா கால்பந்து வீரர் மெஸ்சியின் கேரள வருகை தள்ளி போயிருப்பது குறித்து நிருபர்கள் கேள்விகள் கேட்டனர்.
இதனால் கோபம் கொண்ட அமைச்சர் அப்துர்ரஹ்மான், தமக்கு முன்னால் வைக்கப்பட்டு இருந்த செய்தி தொலைக்காட்சிகளின் மைக்குகளை தள்ளிவிட்டார். அதன் பின்னர் பள்ளி வளாகத்தினுள் நுழைந்தார். அவருடன் பாதுகாப்புக்கு வந்திருந்த உதவி போலீஸ் கமிஷனர் மொய்தீன் குறுக்கிட்டு, வேறு எதுவும் கேட்க வேண்டாம் என்று கூறினார்.
இந்த சம்பவத்தின் போது அமைச்சருடன் வந்திருந்த சிலர், நிருபர்களிடம் வாதம் செய்ததோடு, சிலரை தள்ளிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
அமைச்சர் அப்துர்ரஹ்மான் வருகைக்கு முன்னதாக, எம்பி ஹிப்பி ஈடன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது மெஸ்சி வருகை ரத்தில் சந்தேகத்துக்கிடமான சில பரிவர்த்தனைகள் நடந்ததாக குற்றம்சாட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

