எதிர்க்கட்சியினரின் பொய்களை நம்பாதீர்கள்: அமித் ஷா
எதிர்க்கட்சியினரின் பொய்களை நம்பாதீர்கள்: அமித் ஷா
ADDED : மார் 13, 2024 02:04 AM

ஹைதராபாத், தெலுங்கானாவின் ஹைதராபாதில் நேற்று நடந்த பா.ஜ., சமூக ஊடக தன்னார்வலர்கள் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளான சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கப்படும் என, நாடு சுதந்திரம் பெற்றது முதலே காங்கிரஸ் கட்சி கூறி வந்தது. ஆனால், தாஜா செய்யும் அரசியலுக்காகவும், ஓட்டு வங்கிக்காகவும் அதை எதிர்த்து வருகிறது.
அண்டை நாடுகளில் இருந்து லட்சக்கணக்கில் இங்கு குடிபுகுந்த சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கப்படாததை அவர்கள் மிகப் பெரிய அவமானமாகக் கருதினர். குடியுரிமை இல்லாமல் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.
அவர்களுக்கு குடியுரிமை வழங்குவதன் வாயிலாக பிரதமர் மோடி, அவர்களை கவுரப்படுத்தி உள்ளார். அவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆனால், சி.ஏ.ஏ., குறித்து எதிர்க்கட்சியினர் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். இந்த சட்டம் குடியுரிமையை வழங்குமே தவிர, இருக்கும் குடியுரிமையை பறிக்காது.
இந்த சட்டம் நடைமுறைக்கு வந்தால் சிறுபான்மையினர் தங்கள் குடியுரிமையை இழப்பர் என, காங்., - எம்.பி., ராகுல், மல்லிகார்ஜுன கார்கே, ஏ.ஐ.எம்.ஐ.எம்., தலைவர் அசாதுதீன் ஓவைசி உள்ளிட்டோர் மக்களிடம் பொய்களை பரப்பி வருகின்றனர்.
நம் நாட்டில் வாழும் சிறுபான்மையினருக்கு ஒன்றை கூறிக் கொள்ள விரும்புகிறேன். குடியுரிமை திருத்த சட்டம் யாருடைய குடியுரிமையையும் பறிக்காது என உறுதி அளிக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.

