போரை விரும்பவில்லை; கட்டாயப்படுத்தினால் பதிலடி நிச்சயம்; ராஜ்நாத் சிங் திட்டவட்டம்
போரை விரும்பவில்லை; கட்டாயப்படுத்தினால் பதிலடி நிச்சயம்; ராஜ்நாத் சிங் திட்டவட்டம்
UPDATED : நவ 24, 2025 05:12 PM
ADDED : நவ 24, 2025 05:11 PM

சண்டிகர்: 'இந்தியா ஒரு போதும் போரை விரும்பவில்லை. ஆனால் கட்டாயப்படுத்தப்பட்டால், பின்வாங்காது, பதிலடி நிச்சயம் கொடுக்கப்படும்' என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்து உள்ளார்.
ஹரியானா மாநிலம் குருக்ஷேத்ராவில் நடந்த நிகழ்ச்சியில், ராஜ்நாத் சிங் பேசியதாவது: பஹல்காமிற்குச் சென்ற அப்பாவி சுற்றுலாப் பயணிகள் தங்கள் மதம் குறித்து கேட்ட பிறகு கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகளும் அவர்களின் ஆதரவாளர்களும் இந்தியாவின் கண்ணியம் அதன் பலவீனம் என்று நம்பினர். எங்கள் பொறுமையை பலவீனம் என்று தவறாகக் கருதியவர்களுக்கு, ஆப்பரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை மூலம் ஒரு பதில் கிடைத்தது, அவர்கள் அதை இன்னும் மறக்கவில்லை.
இந்தியா போரை விரும்பவில்லை என்பதை உலகிற்கு விளக்கினோம். போர் ஒருபோதும் பழிவாங்குவதற்காகவோ அல்லது லட்சியத்திற்காகவோ அல்ல. இந்தியா ஒரு போதும் போரை விரும்பவில்லை. ஆனால் கட்டாயப்படுத்தப்பட்டால், பின்வாங்காது, தகுந்த பதிலடி நிச்சயம் கொடுக்கப்படும். நாட்டைப் பாதுகாப்பதற்கும், தர்மத்தை நிலைநிறுத்துவதற்கும் ஆப்பரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
ஆப்பரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின் போது கிருஷ்ணரின் வழிகாட்டுதலை நாங்கள் பின்பற்றினோம். கீதையின் அறிவு மட்டுமே தீர்வுகளை வழங்க முடியும். ஒரு நபரின் நடத்தை அவரது எண்ணங்களால் வடிவமைக்கப்படுகிறது. இன்று, உலகம் முழுவதும் உள்ள பல்கலைக் கழகங்களில் கீதை பற்றிய படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன. கீதை ஒரு ஆன்மிக அல்லது மத நூல் மட்டுமல்ல, ஒரு உலகளாவிய வாழ்க்கை வழிகாட்டி. இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.

